ஹிசாலினியின் மரணத்தினை தொடர்ந்து செல்வந்த குடும்பங்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி
வீட்டு பணியாளர்கள் தொடர்பில், கொழும்பு பகுதியில் உள்ள செல்வந்த குடும்பங்களை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய சிறுவர் பாதுகாப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் 16 வயது சிறுமி ஒருவர் மரணமானதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
நகரத்தின் செல்வந்த வீடுகளில் அகவை குறைந்தவர்கள் வீட்டு உதவியாளர்களாக பணியமர்த்தப்படுகிறார்கள் என்ற தகவல் கிடைத்துள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் முதித விதானபத்திரண தெரிவித்துள்ளார்.
அடுத்த சில நாட்களில் இதுபோன்ற வீடுகளை கண்காணிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அகவைக்குறைந்தவர்கள் பணிகளுக்கு அமர்த்தப்பட்டிருந்தால் வீட்டு உரிமையாளர்களை கைது செய்ய தயங்கபோவதில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
வறுமையானக் குடும்பங்களைச் சேர்ந்த சிறுமிகள் மற்றும் சிறுவர்கள், குறிப்பாக பெருந் தோட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள், கொழும்பு மற்றும் பிற நகர்ப்புறங்களில் உள்ள வீடுகளில் வீட்டுப் பணியாளர்களாக தொடர்ந்து பணியாற்றி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.