இலங்கையில் வாழ்ந்த சிங்கங்கள், புலிகள் உள்ளிட்ட உயிரினங்கள்
பண்டைய காலத்தில் இலங்கை காடுகளில் சிங்கங்கள், புலிகள், நீர் யானைகள், காட்டெறுமைகள், காண்டா மிருகங்கள் உட்பட உயிரினங்கள் வாழ்ந்ததை உறுதிப்படுத்தக் கூடிய தொல்லியல் சாட்சியங்கள் இரத்தினபுரி மாவட்டத்தில் கிடைத்துள்ளன.
மாணிக்ககல் சுரங்கங்களில் இந்த சாட்சியங்கள் கிடைத்துள்ளன. இலங்கையில் அருகி போன விலங்குகள் இரத்தினபுரி அருங்காட்சியக வளவில் சிலைகளாக உருவாக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் சிங்கங்கள் வாழ்ந்தமைக்கான தற்போது உள்ள ஒரே தொல்லியல் சாட்சியானது லண்டனில் உள்ள இயற்கை அறிவியல் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும் சிங்கத்தின் பல் மாத்திரமே.
இது 1936 ஆம் ஆண்டு இரத்தினபுரி மாவட்டத்தின் குருவிட்ட எதந்தன்டெலவல, பன்வில பிரதேசத்தில் உள்ள மாணிக்க கல் சுரங்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
ஒரு லட்சத்து 50 ஆயிரம் ஆண்டுகள் அல்லது அதற்கு முன்னர் இலங்கையில் சிங்கங்கள், நீர் யானைகள் என்பன ஒரே காலத்தில் வாழ்ந்துள்ளன என நம்புவதாக விலங்குகள் தொடர்பான தொல்லியல் நிபுணர் கெலும் மனமேந்திர ஆராச்சி தெரிவித்துள்ளார்.