நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்குள் விரிசல்
தாயகம், தேசியம், அரசியல் இறையாண்மை என்ற ஈழத்தமிழ் மக்களின் அரசியல் பெருவிருப்பின் ஜனநாயக வடிவமாக விளங்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கொள்கைக்கு மாறாக, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்குள் இருக்கும் கனேடிய குழுவொன்று, சிறிலங்காவை ஒரு தேசமாக ஏற்றுக்கொண்டு கூட்டாட்சிக்கு தமது விருப்பத்தை வெளிப்படுத்துகின்றனர் என இந்தியாவின் முன்னணி ஊடகமான எக்ஸ்பிரஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அமேசன் பிறீம் தளத்தில் வெளியாகி சர்சைகளை ஏற்படுத்தியுள்ள 'த பேமிலி மான்-2' வலையெளி தொடர் தொடர்பில் வெளிவந்த செய்திக்கட்டுரையிலேயே இதனை இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.
நாடு கடந்த (தமிழீழ) அரசாங்கம், வான்புலிகள், பெண் போராளிகள் ஆகிய மூன்று விடயங்களை மையப்படுத்தியே இத்தொலைக்காட்சி தொடரின் திரைக்கதை பின்னப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ் 'நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்குள் பல பிரிவுகள் உள்ளது என்றும், வெவ்வேறு சித்தாந்தங்கள் மற்றும் தமிழ் சுதந்திரத்திற்கான அணுகுமுறைகள் காணப்படுகின்றன எனவும் தெரிவித்துள்ளது.
உதாரணத்துக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு இருக்கும் கனேடிய குழுவொன்று 'கூட்டாட்சி' ஏற்பாட்டை ஏற்றுக்கொள்வதற்கான விருப்பத்தை தெரிவிக்கின்றனர் என சுட்டிக்காட்டியுள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை, அது ஒரு சுயாட்சி பிராந்தியமாக சிறிலங்காவின் ஒரு பகுதியாக செயற்படும் என அவர்கள் தெரிவிக்கின்றனர் என குறிப்பிட்டுள்ளது.
இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் இந்தச் செய்தி குறித்து உடனடியாக எதனையும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவிக்கவில்லை. மேலும் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்திக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கைத்தமிழ் புலம்பெயர்ந்தோரிடையே உருவாக்கப்பட்ட நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், 2009ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்விக்கு பின்னராக உருவாக்கப்பட்டதோடு, இலங்கைத்தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் 'தனி தமிழீழத்தை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பயங்கரவாதத்தை நிலை நிறுத்துவதற்கான சூழ்ச்சி' என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை சிறிலங்கா அரசாங்கம் அழைக்கின்றது. ஆனால் அதன் நோக்கங்களும் செயல்களும் 'அமைதி, அகிம்சை, சகிப்புத்தன்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல்' கொள்கைகளின் அடிப்படையில் அமைந்திருப்பதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவிக்கின்றது.
அரசற்ற' ஓர் அரசாங்கமாக அமையப்பெற்றுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கமானது, அமெரிக்கா, நியூசிலாந்து, கனடா, நோர்வே, ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் உள்ள புலம்பெயர்ந்த தமிழர்களிடத்தில் இருந்து ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட 135 உறுப்பினர்களை கொண்டதாகவுள்ளது.
இதன் பிரதமராக விஸ்வநாதன் ருத்ரகுமாரன் இருக்கின்றார். அமெரிக்காவின் நியூயார்க்கில் இருக்கும் இவர் தமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் சர்வதேச சட்ட ஆலோசகராக இருந்தவர். 'தாயகம், தமிழ் நாடு, புலம்பெயர் நாடுகள் என உலகத்தமிழர்களின் பலத்தின் ஊடாக இலக்கினை அடைவதே நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நோக்கமாக உள்ளது என பிரதமர் வி.உருத்திரகுமாரன் தனது அறிக்கையில் ஒன்றில் குறிப்பிடுகின்றார்.
போரின் போது நடைபெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலுக்கு சிறிலங்கா அரசினை பொறுப்புக்கூற வைக்கும் பல நடவடிக்கையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஈடுபட்டுள்ளதுடன், இலங்கையின் தமிழர் தாயக பகுதியில் தனியரசொன்றை உருவாக்கும் முனைப்பில் உள்ளது.
சிறிலங்கா அரசு மீது வழக்குத் தொடர அவர்கள் வாழும் நாடுகளில் உள்ள நீதி மன்றங்களைப் பயன்படுத்துமாறு புலம்பெயர் தமிழ் மக்களை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஊக்குவித்து வருவதுடன், சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பரிந்துரைக்குமாறு அழைப்பு விடுத்துள்ளது.
பிரித்தானியாவின் பயங்கரவாத பட்டியலில் இருந்து தமிழீழ விடுதலைப்புலிகளை நீக்குவதற்கான நாடு கடந்த தமிழீழ அரசாங்கம சட்ட நடவடிக்கை பலனளிக்கவில்லை. 2009ல் தமிழர்களுக்கு எதிரான சிறிலங்கா அரசாங்கத்தின் நடவடிக்கையினை ஓர் இனப்படுகொலையாக அறிவிக்குமாறு கனேடிய அரசியல் தலைவர்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரியிருந்தது.
சிறிலங்கா அரசுக்கு அச்சுறுத்தலாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் எவ்வாறு கருதப்படுகின்றதோ, அதுபோலவே சீனாவுக்கு அச்சுறுத்தலாக நாடுகடத்தப்பட்ட திபெத்திய அரசாங்கம் இருக்கின்றது.
தலாய் லாமாவை தலைமையாக கொண்டுள்ள திபெத்திய அரசாங்கத்துக்கு அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளாலும் பல பிற கட்டமைப்புகளாலும் கணிசமான உதவிகள் கிடைக்கின்றன. ஆனால் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு அவ்வாறான நிலை இல்லை. இதனை எந்த நாடும் அங்கீகரிக்கவில்லை.
1976-2009 ஆண்டுக்கிடையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டத்துக்கான நிதி ஆதரமாக புலம்பெயர் தமிழர்களே இருந்துள்ளனர். போரின் முடிவுக்கு பின்னராக பலரது நடவடிக்கை காரணமாக நிதி ஆதாரத்துக்கான ஆதரவுத்தளம் அந்நியப்பட்டுள்ளது.
ஒப்பீட்டளவில் நிதி திரட்டலுக்கான பயனுள்ள வழிமுறை ஏதும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திடம் காணப்படவில்லை. 2010ம் ஆண்டில் வெளிவந்த சர்வதேச நெருக்கடி குழு வெளியிட்ட ஓர் அறிக்கையில்,
வெளி நாடுகளில் உள்ள பெரும்பாலான தமிழர்கள் தமிழீழம் தொடர்பில் அர்ப்பணிப்புடன் இருக்கிறார்கள்' என்றும் 'இலங்கையில் உள்ளவர்களில் பெரும்பாலானோர் பல தசாப்த கால போரினால் சோர்ந்து போயிருக்கிறார்கள்' என்றும் கூறுகிறது.
இதன் விளைவாக 'இலங்கையில் புலம்பெயர்ந்தோருக்கும், தமிழர்களுக்கும் இடையிலான இடைவெளியை விரிவுபடுத்தியுள்ளது.இலங்கைத்தீவில் முன்னாள் தமிழ் அரசியல்வாதிகளை 'துரோகிகள்' அல்லது 'மக்களின் உரிமைகளுக்காக எழுந்து போராட அச்சப்படுகிறார்கள் ' என புலம்பெயர்ந்தோர் கூறுகின்றனர்.
த பேமிலி மான் - 2' வலையெளி தொடரில் இந்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கமே பேசப்பட்டுள்ளதோடு, ஐரோப்பிய நாடுகளிடமிருந்து தனக்கான அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ள இந்த அரசாங்கம் முனைவதாக காட்டப்படுகின்றது.
இதேவேளை, வேறொரு
பிரிவொன்று இந்தியப் பிரதமரை படுகொலை செய்ய சதி செய்ய முயல்வதாக
காட்சிப்படுத்தப்பட்டுள்ளது என இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.