கோவிட் தடுப்பூசி தொடர்பில் சுகாதார நிபுணர் வெளியிட்டுள்ள தகவல்
தற்போது கையிருப்பிலுள்ள பூஸ்டர் தடுப்பூசிகள் அக்டோபர் 31ஆம் திகதியுடன் காலாவதியாக இருப்பதனால் கோவிட் தடுப்பூசியின் பூஸ்டர் அளவை தாமதமின்றி பெற்று கொள்ளுமாறு சுகாதார நிபுணர் சமித்த கினிகே பொது மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(25) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இதுவரை இலங்கையின் மொத்த சனத்தொகையில் 20 வயதுக்கும் மேற்பட்ட 14.4 மில்லியன் பேரில் 8 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பூஸ்டரை பெற்றுள்ளனர்.
மக்களுக்கான விசேட அறிவிப்பு
20 வயதுக்கு மேற்பட்ட சுமார் ஆறு மில்லியன் மக்கள் இன்னும் பூஸ்டர் தடுப்பூசியை பெறவுள்ளனர்.
எனவே, தற்போது நாட்டில் ஏராளமான தடுப்பூசிகள் கையிருப்பில் இருப்பதனால் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் நாட்பட்ட நோய்கள் உள்ளவர்களுக்கு, சுகாதார அதிகாரிகள் நான்காவது அளவைப் பரிந்துரைத்துள்ளனர்.
மேலும் 20 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆர்வமாக இருந்தால் நான்காவது தடுப்பூசியை பெறலாம்”என தெரிவித்துள்ளார்.