தடுப்பூசி பாதுகாப்பு இல்லாத நாடுகளை தாக்கும் கோவிட் வைரஸ்! டெட்ரோஸ் அதானோம் எச்சரிக்கை
தடுப்பூசி பாதுகாப்பு இல்லாத நாடுகளை வைரஸ் தொடர்ந்து தாக்கி வருவதால், கோவிட் -19 இன் உலகளாவிய இறப்பு எண்ணிக்கை 40 லட்சத்தை கடந்து விட்டதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
கோவிட் வைரஸால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை விரைவாக அதிகரித்து வருகிறது. அமெரிக்க ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகம் தொகுத்த தரவுகளின்படி கடந்த இரண்டரை மாதங்களில் 10 லட்சம் கொவிட் இறப்புகள் பதிவாகின.
அதேநேரம் கடந்த 9 மாதங்களில் மாத்திரம் 10 லட்சம் பேர் கொரோனாவுக்கு பலியாகினர். உலகளவில் 3.3 பில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசி அளவுகள், அண்மைய மாதங்களில் நாளாந்த இறப்பு எண்ணிக்கையைத் தடுத்து வருகின்றன.
ஒவ்வொரு நாளும் சுமார் 7,900 இறப்புகள் பதிவாகி வருகின்றன. கடந்த ஜனவரி மாதத்தில் நாள் ஒன்றுக்கு 18,000 க்கும் அதிகமான கோவிட் இறப்புக்கள் பதிவாகின.
எனினும் இறப்புகளின் உண்மையான எண்ணிக்கை இதனை விட அதிகமாக இருக்கலாம் என உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.
வேகமாக பரவும் மாறுபாடுகள் மற்றும் தடுப்பூசியில் அதிர்ச்சியூட்டும் ஏற்றத்தாழ்வு ஆகியவற்றால் உலகின் ஒவ்வொரு பிராந்தியத்திலும் தீவிரமான அதிகரிப்புகள் ஏற்பட்டுள்ளன என்று டெட்ரோஸ் செய்தி மாநாட்டில் கூறியுள்ளார்.
இந்த வைரஸ் அமெரிக்காவில் மட்டும் 600,000 உயிர்களை காவுகொண்டுள்ளது. ஆனால் உலகின் மிக விரைவான தடுப்பூசிகள் காரணமாக இறப்பு விகிதங்கள் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளன.
இதற்கிடையில், லத்தீன் அமெரிக்காவில் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, இந்த பகுதியில் வேகமாக பரவி வரும் டெல்டா மற்றும் லம்ப்டா கொரோனா வைரஸ் வகைகளுக்கு மத்தியில் மிகக் குறைந்த தடுப்பூசி பாதுகாப்பே இதற்கு காரணமாகும்.
2021, ஜூலை 6 முதல் அதிக இறப்பு விகிதங்களைக் கொண்ட 10 நாடுகளில் ஏழு நாடுகள் தென் அமெரிக்காவின் நாடுகளாக இருந்தன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.