நியூசிலாந்தில் மீண்டும் கோவிட் பரவல்! - அரசு பிறப்பித்துள்ள உத்தரவு
நியூசிலாந்தில் மீண்டும் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ள நிலையில், மீண்டும் முகக்கவசம் அணிய அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
உலகம் முழுவதிலும் கோவிட் தொற்றின் தாக்கம் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக நீடித்துள்ளது. நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.
எனினும், நியூசிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட கடுமையான கோவிட் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் காரணமாக கடந்த ஆறு மாதங்களாக நோய் பரவல் கட்டுக்குள் இருந்தது.
இந்நிலையில், நியூசிலாந்து நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று பரவியுள்ளது. ஆக்லாந்து பகுதியில் வசித்து வந்த 58 வயதுடைய ஒருவருக்கு நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து ஆக்லாந்து மற்றும் கோரமண்டல் பகுதியில் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3 நாள் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நோய் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் மீண்டும் முகக்கவசம் அணிய அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, பல்பொருள் அங்காடிகள், எரிபொருள் நிலையங்கள், மருந்தகங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு ஊரடங்கின் போது சென்றால் கட்டாயம் மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும் என்று நியூசிலாந்து பிரதமர் அறிவித்துள்ளார்.
வைரஸ் மரபணு வரிசை சோதனையில் தற்போது நியூசிலாந்தில் பரவியிருப்பது டெல்டா வகை கொரோனா என உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.