கோவிட் பரவல் அச்சம் காரணமாக வெறிச்சோடிய கொழும்பு உட்பட பல பகுதிகள்
இலங்கையில் மீண்டும் கோவிட் பரவல் அச்சமானது தலை தூக்கியுள்ள நிலையில் நாட்டின் பல பகுதிகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை அபாய நிலையானது எல்லை மீறி செல்வதாகவும், எனவே நாட்டை முடக்க வேண்டும் என்றும் பல தரப்பினர் தொடர்ச்சியாக கோரிக்கை முன்வைத்து வருகின்றனர்.
என்ற போதும் நாட்டு மக்களின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு நாட்டை முழுமையாக முடக்க முடியாது என அரசாங்க தரப்பிலிருந்து தொடர்ச்சியாக கூறப்பட்டு வருகிறது.
இந்த சந்தர்ப்பத்தில் கோவிட் தொற்றுக்கு இலக்காகும் நோயாளர்களின் எண்ணிக்கை மற்றும் உயிர் பலிகளின் எண்ணிக்கை அதிரிப்பு என்பவற்றை கருத்தில் கொண்டும் கோவிட் பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்கிலும் தற்போது மாகாணங்களுக்கு இடையில் பயணக்கட்டுப்பாட்டை கொண்டு வருவது தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எனினும் தேவை ஏற்பட்டால் மாவட்டங்களுக்கு இடையே பயணக் கட்டுப்பாடுகளையும் அரசாங்கம் விதிக்கும் என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன் மாவட்டங்களுக்கு இடையே பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு எடுக்கப்படவில்லை என்றாலும், அது நிராகரிக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறானதொரு நிலையில் பல பகுதிகளில் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ள நிலையில், அதிலும் குறிப்பாக தனிமைப்படுத்தப்படாத பகுதிகளிலும் கூட பல இடங்கள் வெறிச்சோடிய நிலையில் காணப்படுவதாக தெரியவருகிறது.
குறிப்பாக கொழும்பிலுள்ள பிரதான பேருந்து தரிப்பிடங்களில் மக்கள் நடமாட்டம் மிகக் குறைவாகக் காணப்படும் அதேவேளை கொழும்பின் பல பகுதிகளிலும் கூட வாகன போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் மந்தநிலையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் இறுக்கமான நடைமுறைகளும் பின்பற்றப்பட்டு வருகின்றன.
அதிலும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் உள்ளிட்டோர் இணைந்து கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனமையும் குறிப்பிடத்தக்கது.