புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் 7 பேருக்கு கோவிட் தொற்று
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் 7 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இயங்கி வருகின்ற ஆடை தொழிற்சாலையில் வெளிமாவட்டங்களில் இருந்து வருகைதந்து முகாமைத்துவம் செய்கின்ற அதிகாரிகள் சுமார் 30 பேர் வரையில் பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள் தற்போது நாட்டில் உள்ள நடைமுறைகளுக்கு அமைய வெளிமாவட்டங்களில் இருந்து வருகைதந்தாலும் தனிமைப்படுத்தல் செயற்பாடின்றி நேரடியாக கடமையாற்றி வரும் நிலையில் முல்லைத்தீவு மாவட்ட சுகாதாரத் துறையினர் இவர்களில் 10 பேருக்கு எழுமாறாக பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது அவர்களில் 6 பேருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளமை நேற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையிலே குறித்த ஆடை தொழிற்சாலையில் பணியாற்றி வரும் சாதாரண பணியாளர் ஒருவர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கும் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனூடாக புதுக்குடியிருப்பு ஆடை தொழிற்சாலையில் முகாமைத்துவ ஊழியர்கள் மாத்திரமன்றி பணியாளர்களுக்கும் கோவிட் பரவியுள்ள ஒரு நிலைமை உருவாகியுள்ளது.
எனவே இந்த ஆடை தொழிற்சாலையில் பணியாற்றுபவர்களுடன் தொடர்புடையவர்கள், அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாகப் பேணுவதோடு, கோவிட் தொற்று அறிகுறிகள் அவர்களிடம் காணப்பட்டால் அவர்கள் உடனடியாக சுகாதாரப் பிரிவினரை நாடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனைவிட முள்ளியவளை, கணுக்கேணி பகுதியில் ஒருவருக்கும், முல்லைத்தீவு
கள்ளப்பாடு தெற்கில் ஒருவருக்கும் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.