மன்னாரில் இதுவரை 19 கோவிட் மரணங்கள் பதிவு
மன்னார் மாவட்டத்தில் நேற்று மாலை மேலும் புதிதாக 32 கோவிட் - 19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், கடந்த ஒரு மாதத்தில் 643 கோவிட் - 19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்டத்தில் கோவிட் - 19 நிலவரம் தொடர்பாக அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும்,
மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர். மற்றும் அன்ரிஜன் பரிசோதனைகளின் போது நேற்றைய தினம் மாலை மேலும் புதிதாக 32 கோவிட் - 19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 1ஆம் திகதி தொடக்கம் நேற்று வரையான ஒரு மாத காலப்பகுதியில் 643 கோவிட் - 19 தொற்றாளர்கள் மன்னார் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த வருடம் 1667 தொற்றாளர்களும், மாவட்டத்தில் இதுவரை 1684 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன் மன்னார் மாவட்டத்தில் இதுவரை 19 கோவிட் மரணங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.




