மன்னாரில் எதிர்பார்க்கப்படும் 728 பீ.சி.ஆர். பரிசோதனைகளுக்கான முடிவுகள்
மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 390 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மேலும் 728 பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கான முடிவுகள் எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மன்னார் மாவட்டத்தில் மொத்தமாக 390 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த வருடம் ஜனவரி தொடக்கம் தற்போது வரை 373 கோவிட் தொற்றாளர்களும், மே மாதம் முதலாம் திகதி தொடக்கம் தற்போது வரை 31 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் இது வரை 3 கோவிட் மரணங்கள் இடம்பெற்றுள்ளன. அத்துடன் இந்த மாதம் 1288 பீ.சி.ஆர்.பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அவற்றில் 728 பீ.சி.ஆர். பரிசோதனைகளுக்கான முடிவுகள் எதிர்பார்க்கப்பட்டுள்ளன.
மேலும் காய்ச்சலுடன் மூச்சு விடுவதில் சிரமம் அல்லது
சுவாச குணங்குறிகளுடன் மூச்சு விடுவதில் சிரமம் காணப்பட்டால் உடனடியாக
அருகில் உள்ள வைத்தியசாலையை நாடுமாறும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.