கோவிட் பரவல் தீவிரம் - போரதீவுப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் விடுத்துள்ள கோரிக்கை
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவினை கோவிட் தொற்றின் மூன்றாவது அலையிலிருந்து பாதுகாப்பதற்கு உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் சுகாதார துறையினருக்கு முழுமையான ஆதரவினை வழங்க வேண்டும் என போரதீவுப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் யோ.ரஜனி கோரிக்கை விடுத்துள்ளார்.
போரதீவுப்பற்று பிரதேசசபையின் 39ஆவது அமர்வு நேற்றைய தினம் இடம்பெற்றிருந்தது. இதில் வைத்து உரையாற்றும் போதே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
கோவிட் மூன்றாவது அலையின் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதன் காரணமாக இந்த சபையானது விசேடமாக கூட்டப்பட்டுள்ளது.
இதன்போது நாட்டில் தொற்றானது வேகமாக பரவி வருவதன் காரணமாக கோவிட் மூன்றாவது அலை தாக்கத்திலிருந்து பொது மக்களை பாதுகாக்கும் நோக்கோடு போரதீவுப்பற்று பிரதேச சபை உறுப்பினர்களும், பிரதேசசபை உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று கோவிட் அச்சுறுத்தலில் இருந்து மக்களை பாதுகாப்பதற்கு பிரதேசசபையின் ஊடாக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டதுடன் சுகாதார பிரிவினர் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வெளியிடங்களில் இருந்து போரதீவுப்பற்று பிரதேசத்திற்குள் வருவோர் தொடர்பில் அவதானம் செலுத்தி அது தொடர்பான தகவல்களை சுகாதார பிரிவினருக்கு வழங்குவதன் மூலம் பரவல்களை தடுப்பதற்கான வழிவகைகள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.
பிரதேசசபை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் ஏற்பட்டுள்ள காலதாமதத்தினை
நிவர்த்தி செய்வதற்கான தீர்மானமும் இதன்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.