எந்த நேரத்திலும் இலங்கையின் எப்பகுதியிலும் முடக்கம் வரலாம்! - சவேந்திர சில்வா அறிவிப்பு
இலங்கையில் கோவிட் வைரஸ் மிகவும் வேகமாக பரவும் எந்த இடமும் எந்த நேரத்திலும் தனிமைப்படுத்தப்படும் என்று இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
கடந்த சில வாரங்களாக கோவிட் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் சுகாதாரத்துறையினர் வழங்கும் வழிகாட்டல்களை மக்கள் பின்பற்றுவது அவசியமாகும்.
பண்டிகைக் காலத்தில் மக்கள் இதுபற்றி கூடுதல் கவனம் செலுத்தவில்லை. நோய் பரவலை கருத்திற் கொண்டு பாடசாலைகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதா என்பது பற்றி தீர்மானிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை எதிர்வரும் நான்கு மாதங்களுக்கு எந்தவொரு வைபவத்திற்கும் அனுமதி வழங்காமல் இருப்பது குறித்து கருத்திற்கொள்ள உள்ளதாக இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
கடந்த காலத்தில் வழங்கப்பட்டிருந்த வழிகாட்டல்கள் ஓரளவு தளர்த்தப்பட்ட போதிலும் தற்போது அவ்வாறு செயற்பட முடியாது என அவர் சுட்டிக்காட்டினார்.
சுகாதார வழிகாட்டல்களை மக்கள் கடைப்பிடிக்காததால் மீண்டும் ஆபத்து நிலையை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.
தற்போது இளம் சந்ததியினர் மத்தியிலும் இந்த வைரஸ் பரவும் ஆபத்துத் தோன்றியுள்ளது.
நாட்டை முடக்குவதற்கு இதுவரை தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை.
தற்போதைய நிலைமை குறித்து கண்டறிவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் விசேட கூட்டமொன்று நாளை இடம்பெறும் என இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே குறிப்பிட்டுள்ளார்.