கோவிட் அறிகுறிகள் இருப்பின் தடுப்பூசியை தவிர்க்கவும் - சுதத் சமரவீர
ஒருவருக்கு கோவிட் அறிகுறிகள் இருந்தால், அவர் கோவிட் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளக்கூடாது என்று தலைமை தொற்றுநோயியல் நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
கோவிட் அறிகுறிகள் உள்ள ஒருவர் தடுப்பூசி பெறுவது பயனற்றது என இன்று ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
கோவிட் தொற்று உள்ளவராக ஒருவர் கண்டறியப்பட்டால் வைரஸ் ஏற்கனவே அவரின் உடலில் நுழைந்துவிட்டமை உறுதிப்படுத்தப்படுகின்ற நிலையில் அவர் கோவிட் தடுப்பூசியைப் பெறுவதில் எவ்வித பயனும் இல்லை.
எனவே, வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, தற்போது தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் நோய்த்தொற்று இருப்பதாகச் சந்தேகிக்கப்படுபவர்களுக்கு மருத்துவர்கள் தடுப்பூசி வழங்குவதில்லை.
இதற்கிடையில், ஒருவர் வைரசால் பாதிக்கப்பட்ட பின்னர் அறிகுறிகளைக் காட்டாவிட்டால் அவரிடம் இருந்து மற்றொரு நபருக்கு வைரஸ் பரவுவதன் தாக்கம் சுமார் 10-14 நாட்களில் முற்றிலும் குறைகின்றது.
எனவே தான் அறிகுறியற்ற கோவிட் தொற்றாளர்களை 10 நாட்களுக்குப் பிறகு அவர்களின் வீடுகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இருப்பினும், அவர்கள் இன்னும் நான்கு நாட்கள் வீட்டுக்குள் இருக்க வேண்டும்.
14 நாட்களுக்குப் பிறகு தான் அவர்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப முடியும்
என்றும் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.