பெருந்தொற்றுக்கு சவால் விடுத்த மனிதநேயத்திற்கு செய்யும் மரியாதை நிகழ்வு! (Photos)
கிளிநொச்சி
“பெருந்தொற்றுக்கு சவால் விடுத்த மனிதநேயத்திற்கு செய்யும் மரியாதை” எனும் தொனிப்பொருளில் கௌரவிப்பு நிகழ்வு கிளிநொச்சி வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சுகந்தன் தலைமையில் இன்று காலை 10.30 மணியளவில் இந் நிகழ்வு இடம்பெற்றது.
நாட்டில் கோவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு முதல் ஆண்டு நிறைவான இன்றைய நாளையொட்டி ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் பணிப்பிற்கமைய பெருந்தொற்றுக்கு சவால் விடுத்த மனிதநேயத்திற்கு மரியாதை செய்யும் முகமாக நாடளாவிய ரீதியில் குறித்த நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
குறித்த நிகழ்வில் கோவிட் பரவலை கட்டுப்படுத்தவதற்கு உழைத்த வைத்தியர்கள், தாதியர்கள், சுகாதார துறையினர், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்டோருக்கு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந் நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், வைத்தியர்கள், தாதியர்கள், மன்னார் சமூக மேம்பாட்டுக்கான அபிவிருத்தி நிறுவனத்தின் பிரதிநிதிகள், இலங்கை செஞ்சிலுவை சங்கம் உள்ளிட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது கோவிட் ஒழிப்பு வேலைத்திட்டத்தினை சிறந்த முறையில் முன்னெடுத்தமை மற்றும் மக்களை விழிப்பூட்டியமைக்காக கிளிநொச்சி ஊடகவியலாளர்களை ஊக்குவிக்கும் வகையில் பொதுச்சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது. குறித்த சான்றிதழினை சிரேஸ்ட ஊடகவியலாளர் சுப்ரமணியம் பாஸ்கரன் ஊடகவியலாளர்கள் சார்பில் பெற்றுக்கொண்டார்.
வவுனியா
இலங்கையில் கோவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையின் ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு வவுனியாவில் கௌரவிப்பு நிகழ்வு ஒன்று இடம்பெற்றது.
வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்தியர் நிலக்சன் தலைமையில் இன்று (29.01) இந்நிகழ்வு இடம்பெற்றது.
கோவிட் தொற்றுக்கு எதிராக இலங்கையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு இன்றுடன் ஓராண்டு பூர்த்தியாகியுள்ளது. இதனை முன்னிட்டு தேசிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றது.
அதனடிப்படையில், வவுனியா மாவட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கோவிட் தடுப்பூசியின் முதலாம், இரண்டாம் மற்றும் பூஸ்டர் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டமை தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதனை வெற்றிகரமாகச் செலுத்துவதற்குக் காரணமாக இருந்த வைத்தியர்கள், சுகாதார பரிசோதகர்கள், தாதியர்கள் ஆகியோருக்கு ஒத்துழைப்பு நடவடிக்கைகளை வழங்கிய பிரதேச செயலாளர்கள், பொலிஸ் அதிகாரிகள், விமானப் படையினர் மற்றும் அரசாங்க அதிபர் ஆகியோருக்கும் இதன்போது நினைவு கேடயங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினரும், வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கு.திலீபன், நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான், அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திர, மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்தியர் எம்.மகேந்திரன், வைத்திய அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பொலிஸ் அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
யாழ்ப்பாணம்
கோவிட் காலத்தில் பணியாற்றிய ஊழியர்கள் மற்றும் உத்தியோகஸ்தர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
"பெருந்தொற்றுக்கு சவால் விடுத்த மனித நேயத்திற்குச் செய்யும் மரியாதை" எனும் தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் நிகழ்வின் ஒரு அங்கமாக வடக்கு மாகாணத்திற்கான நிகழ்வு மாகாண சுகாதார பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பெருந்தொற்றின் போது உயிர் நீர்த்தவர்களுக்கு ஒரு நிமிட மௌன வணக்கம் செலுத்தப்பட்டதுடன், பெருந்தொற்றின் போது செயற்பட்ட சகல தரப்பினருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வடக்கு மாகாண அமைச்சின் செயலாளர்கள், முப்படைகளின் உயர்
அதிகாரிகள், பொலிஸ் உயர் அதிகாரிகள் மற்றும் கோவிட் தொற்று காலத்தின் மனித
நேயப்பணிகளை முன்னெடுத்த வைத்தியர்கள் பணியாளர்கள் எனப்பலரும்
கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.