வவுனியாவில் மேலும் 3 பேருக்கு கோவிட் தொற்று
வவுனியாவில் மேலும் 3 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் இன்று மட்டும் 6 பேர் கோவிட் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
வவுனியாவில் கோவிட் தொற்று அதிகரித்து வரும் நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களிடம் பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன் முடிவுகள் சில இன்று இரவு (11.05) வெளியாகின. அதில் வவுனியா கோவில்குளம் பகுதியில் ஒருவருக்கும், தோணிக்கல் பகுதியில் ஒருவருக்கும், செட்டிகுளம் பகுதியில் ஒருவருக்கும் என 3 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று மதியம் ஏற்கனவே 3 பேர் கோவிட் தொற்றாளர்களாக இனங்காணப்பட்ட நிலையில், இரவு வெளியாகிய முடிவுகளின் படி இன்று மட்டும் 6 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து அவர்களை கோவிட் வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கும், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதேவேளை, இன்று இனங்காணப்பட்ட தொற்றாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இனங்காணப்பட்டுள்ளதுடன், ஒருவருக்கு வீரியம் கூடிய கோவிட் தொற்றியுள்ளதாக சுகாதார பிரிவினர் ஊடாக அறிய வரும் நிலையில்,இது தொடர்பில் வவுனியா வைத்தியசாலை பணிப்பாளரை தொடர்பு கொண்டு கேட்ட போது,
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட எவருக்கும் கோவிட் தொற்று இல்லை. தவறான தகவல் என சமூக பொறுப்பற்ற விதத்தில் தொலைபேசி அழைப்பை துண்டித்து இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.