பொருளாதார நெருக்கடிக்கு கோவிட் தொற்று காரணமல்ல : அமைச்சர் உதய கம்மன்பில
நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியை தாம் மிக சரளமாக தெளிவுப்படுத்துவதாக எரி சக்தி அமைச்சர் உதய கம்மன்பில (Udaya Gammanpila) தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திடம் ரூபாய் மற்றும் டொலர் இல்லாததே தற்போது காணப்படும் பிரச்சினை எனவும் கூறியுள்ளார். வரவு செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே கம்மன்பில இதனை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையர்கள் மிகவும் நவநாகரீகமான மக்கள். வருமானத்தை விட செலவு செய்ய விரும்பும் மக்கள் என்பதால், 1955 ஆம் ஆண்டு முதல் கொண்டு வரப்பட்ட வரவு செலவுத்திட்டங்கள் பற்றாக்குறையுடன் கூடியவை.
அன்று முதல் இன்று வரை வரவை விட செலவு அதிகம். செலவுகளை ஈடு செய்ய ரூபாயில் கடன் பெற்றதன் மூலம் நெருக்கடி ஆரம்பித்தது. தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு 1955 ஆம் ஆண்டு முதல் நாட்டை ஆட்சி செய்த அனைத்து அரசாங்கங்களும் பொறுப்புக் கூற வேண்டும்.
வருமானத்தை விட செலவுகளுக்கு கடன் பெறுவது என்பது எதிர்கால சந்ததியினர் செலவிட வேண்டிய பணத்தை தற்போதே செலவிடுவதாகும். எமக்கு உரிமையில்லாத வாழக்கை மட்டத்தை எதிர்கால சந்ததியை அடக்கு வைத்து அனுபவிப்பதே தற்போது நடக்கின்றது.
1955 ஆம் ஆண்டில் இருந்து ஆரம்பித்த இந்த நிலைமை, 1978 ஆம் ஆண்டில் இருந்து டொலர் மூலம் கடனை பெற ஆரம்பித்ததால், மோசமான நிலைமைக்கு சென்றது.
பொருளாதார நெருக்கடிக்கு இதுவும் ஒரு காரணம். இந்த பொருளாதார நெருக்கடியானது கோவிட் தொற்று நோய் காரணமாக ஏற்பட்டதல்ல, தொற்று நோய் காரணமாக நிலைமை மோசமடைந்தது.
நிலைமை மோசமடைந்த சந்தர்ப்பத்தில் தற்போதைய அரசாங்கம் ஆட்சியில் இருப்பது மட்டுமே மாற்றம். 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றி பெற்றிருந்தாலும் அவரும் இந்த நெருக்கடியை எதிர்நோக்கி நேரிட்டிருக்கும் எனவும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.