அடுத்த வாரம் விற்பனைக்கு வரவுள்ள கோவிட் கேப்சூல்: விலையும் அறிவிப்பு
இந்தியா முழுவதும் சமீப நாட்களாக கோவிட் தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அடுத்த வாரம் முதல் கோவிட் மாத்திரைகள் விற்பனைக்கு வரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரவி வரும் ஒமிக்ரோன் தொற்றைக் கட்டுப்படுத்தும் முகமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இருந்தும் கடந்த 24 மணிநேரத்தில் 37,379 பேருக்கு கோவிட் பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன என நேற்று (செவ்வாய்க்கிழமை) தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், கோவிட் பாதிப்புக்கு ஆளானவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக, அமெரிக்காவின் மெர்க் நிறுவனம் கேப்சூல் வடிவிலான மோல்னுபிரவிர் என்ற மாத்திரையை உருவாக்கியுள்ளது.
இந்த மாத்திரையை இந்தியாவில் டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் தயாரித்து வழங்க, அமெரிக்க நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதுடன், மாத்திரை ஒன்றின் விலை ரூ.35 ஆக விற்கப்படவுள்ளது.
அடுத்த வாரம் இந்தியா முழுவதுமுள்ள மருந்துக் கடைகளில் இந்த மாத்திரை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.