திருகோணமலை துறைமுக பொலிஸ் நிலைய உத்தியோகத்தருக்கு கோவிட் - 19 தொற்று
திருகோணமலை துறைமுக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தருக்கு கோவிட் - 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருகோணமலை பொது வைத்தியசாலையில் இன்று சிகிச்சைக்காக சென்ற பொலிஸ் உத்தியோகத்தருக்கே பரிசோதனைகளின் போது இவ்வாறு கோவிட் - 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை விடயத்துக்கு பொறுப்பான வைத்திய அதிகாரி தெரிவித்ததாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார். பொலிஸ் உத்தியோகத்தருடன் நெருங்கி பழகிய மற்றைய பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அன்டிஜென் பரிசோதனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கந்தளாய் பிரதேசத்தில் இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், திருகோணமலை மாவட்டத்தில் தேவைக்கேற்ற விதத்தில் பிசிஆர் மற்றும் அன்டிஜென் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம் தெரிவித்துள்ளது.
மேலும், பொது மக்கள் தொடர்ந்தும் முகக் கவசங்களை பாவிக்குமாறும் சமூக இடைவெளிகளை தொடர்ந்தும் பேணுமாறும் சுகாதாரத் திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.



