800 லீட்டர் டீசலுடன் கைது செய்யப்பட்டவருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
ஆலையடிவேம்பு பலநோக்கு கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் சட்டவிரோதமான முறையில் கொள்கலன்களில் 800 லீட்டர் டீசல் பதுக்கி வைத்த குற்றச்சாட்டில் கைது செய்த ஒருவருக்கு நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 27.03.2026 விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளதுடன், டீசலை நீர்ப்பாசனத் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.
நீதிமன்ற உத்தரவு
அக்கரைப்பற்று பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை (22) இரவு ஆலையடிவேம்பு ப.நோ. கூட்டுறவுச் சங்கம் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கொள்கலன்களில் நிரப்பி வைக்கப்பட்டிருந்து 800 லீட்டர் டீசலுடன் அங்கு கடமையாற்றும் ஒருவரை கைது செய்துள்ளனர்.

இதனையடுத்து, குறித்த நபருக்கு எதிராக கடந்த வெள்ளிக்கிழமை(27) அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் பொலிசார் வழக்கு தாக்குதல் செய்ததையடுத்து அன்றைய தினம் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது குற்றம் சாட்டப்பட்டவர் சார்பில் சட்டத்தரணி முன்னிலையாகி குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டீசலுக்கு முறையான ஆவணங்கள் பெற்றுள்ளதாகவும் உண்மை விடயங்களை எடுத்துரைத்துள்ளார்.
அதன் பின்னர், ஆவணங்களை ஆராய்ந்த நீதவான் பொலிசார் போலியாக வழக்கு தாக்குதல் செய்துள்ளமை கண்டறிந்து கொண்டு கைது செய்யப்பட்டவர் குற்றமற்றவர் என விடுதலை செய்ததுடன் அங்கு மீட்கப்பட்ட டீசலை மீண்டும் அவர்களிடம் ஒப்படைக்குமாறு பொலிசாருக்கு கட்டளை பிறப்பித்து உத்தரவிட்டார்.
போலி வழக்கு பதிவு
இது தொடர்பாக சம்பவம் தொடர்பாக மட்டுப்படுத்தப்பட்ட ஆலையடிவேம்பு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் நா.ஏரம்பமூர்த்தி தெரிவிக்கையில்,
ஆலையடிவேம்பு கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தினருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை (22) அக்கரைப்பற்று, நீர்ப்பாசனத் திணைக்களத்தினரால் தங்கள் தேவைக்காக டீசல் தேவையென முறையாக கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும், குறித்த அரச கட்டளைக்கு அமைய 04 பெரல் டீசல் வழங்கப்பட்டு திணைக்களத்தினர் கொண்டு செல்வதற்காக எரிபொருள் நிரப்பு நிலையத்தின் முன் பகுதியில் வைக்கப்பட்டு இருந்தது.

இதன்போது இரகசியத் தகவலொன்று கிடைக்கப்பட்டுள்ளது என தெரிவித்து வருகை தந்த பொலிஸாரிடம் அதற்கான அரச கட்டளையை காட்டியும் பொலிசார் அதனை ஏற்காது அதனை மீறி அங்கிருந்த 04 டீசல் கொள்கலன்களை கைப்பற்றியதுடன் கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒருவரை கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று அவருக்கு எதிராக அக்கரைப்பற்று நீதிமன்றத்தில் வழக்கு தாககுதல் செய்துள்ளனர்.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்போது போதிய ஆதாரங்கள் உள்ளதால் சுமத்தப்பட்ட குற்றசாட்டு போலியானது என நிரூபிக்கப்பட்டு கைப்பற்றப்பட்ட டீசலை நீர்ப்பாசனத் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்குமாறு நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
ஆலையடிவேம்பு ப.நோ.கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பு நிலையம் கடந்த காலங்களிலும் தற்போதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டபோது பிரதேச மக்களுக்கு முடிந்தவரை எரிபொருள் நெருக்கடி ஏற்படாதவாறு சீரான முறையில் துரிதகதியில் இரவு பகல் பாராது ஊழியர்கள் சேவை மனப்பான்மையுடன் எரிபொருளை விநியோகித்து வருகின்றனர்.
இதனை பொறுக்க முடியாதவர்களால் பிரதேசத்தை மற்றும் ஆலையடிவேம்பு ப.நோ.கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தை அவமானப்படுத்தும் திட்டமே செயலாக இதனை கருதுகின்றேன் என அவர் தெரிவித்தார்.