கைது செய்யப்பட்ட இந்திய கடற்தொழிலாளர்களுக்கு நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு(Photos)
கிளிநொச்சி - இரணைதீவு கடற்பரப்பில் கடந்த 13ஆம் திகதி எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 12 இந்திய கடற்தொழிலாளர்களுக்கும் ஏழு வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட 6 மாத கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு பிணையில் செல்ல கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.
இரணைதீவு கடற்பரப்பில் கடந்த 13ஆம் திகதி எல்லை தாண்டிய நிலையில் மீன் பிடித்துக்கொண்டிருந்த 12இந்திய கடற்தொழிலாளர்களையும் அவர்களின் இரண்டு படகுகளையும் கைது செய்த கடற்படையினர் கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்திடம் ஒப்படைத்தனர்.
அதன்பின் குறித்த 12 இந்திய கடற்தொழிலாளர்களும் B/202/2022 ,B/203/2022 ஆகிய வழக்குகளுக்கு அமைவாக கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எஸ் பாலசுப்ரமணியம் முன்னிலையில் 13ஆம் திகதி பகல் முன்னிறுத்தப்பட்டதையடுத்து கடந்த 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
கடந்த 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை பகல் 11 .40 மணிக்குக் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதிமன்ற நீதவான் எஸ் லெனின்குமார் முன்னிலையில் குறித்த வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன் போது இன்று திங்கட்கிழமை குறித்த இந்திய கடற்தொழிலாளர்களை மன்றில் முன்னிலைப்படுத்துமாறும் அன்றையதினம் குறித்த இரண்டு வழக்குகளுக்கும் குற்றச்சாட்டுப் பத்திரங்களைத் தாக்கல் செய்யுமாறும் கட்டளை இடப்பட்டது.
அதற்கமைவாக இன்றையதினம் 12 இந்திய மீனவர்களும் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதிமன்ற நீதவான் எஸ் லெனின்குமார் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
குற்றச்சாட்டுப் பத்திரங்களும் தாக்கல் செய்யப்பட்டதையடுத்து குறித்த இரண்டு வழக்குகளுடனும் தொடர்புபட்ட இந்திய கடற்தொழிலாளர்கள் 12 பேருக்கும் தலா ஏழு வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட ஆறுமாதகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன் பிணையில் செல்ல நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.
இதேவேளை இவர்களைக் கைது செய்யும்போது இவர்களிடமிருந்த கைத்தொலைபேசிகள் மற்றும் ஒருவரிடம் இருந்து மீட்கப்பட்ட மலேசிய நாணயம் மற்றும் இந்திய நாணயங்கள் விடுவிக்கப்பட்டதுடன், படகுகள் வலைகள் மீன்பிடி உபகரணங்கள் என்பன அரசுடைமையாக்கப்பட்டுள்ளன.
குறித்த இருவழக்குகளிலும் இந்திய கடற்தொழிலாளர்கள் சார்பாக இந்தியத் துணைத் தூதரக
அதிகாரி முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.