கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்கு நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு
கிளிநொச்சி - இரணைதீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 12 மீனவர்களுக்கும் எதிர்வரும் 25 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
எல்லை தாண்டிய நிலையில் மீன் பிடித்துக்கொண்டிருந்த 12இந்திய மீனவர்களையும் அவர்களின் இரண்டு படகுகளையும் நேற்றிரவு கடற்படையினர் கைது செய்திருந்தனர்.
குறித்த 12மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் சட்ட நடவடிக்கைக்காகக் கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்த நிலையில் இன்று பிற்பகல் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எஸ். சிவபாலசுப்பிரணியம் முன்னிலையில் முற்படுத்தியபோதே அவர் இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.
குறித்த மீனவர்களின் விபரங்களை யாழ் இந்தியத் துணைத்தூதரக அதிகாரிகள் பெற்று அவர்களுக்குத் தேவையான, உணவு, உடை என்பவற்றை வழங்கியிருந்தனர்.
இவர்கள் அனைவரும் இராமேஸ்வரத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



