போதைப்பொருள் கடத்தல்காரர் ஹரக் கட்டா தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
போதைப்பொருள் கடத்தல்காரர் ஹரக் கட்டாவிடமிருந்து வாக்குமூலம் பெறுவதற்கு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்குமாறு பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று (09) உத்தரவிட்டுள்ளது.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள, சக்திவாய்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும், குற்றம் சாட்டப்பட்ட நதுன் சிந்தக விக்ரமரத்ன எனப்படும் ஹரக் கட்டா தொடர்பான வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தால் விசாரணைக்குட்படுத்தப்பட்டது.
நீதிமன்றத்திடம் கோரிக்கை
நீதிபதி சுஜீவ நிஸ்ஸங்க முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் நடத்தப்படும் விசாரணை தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட நதுன் சிந்தகவிடம் வாக்குமூலம் பதிவு செய்ய நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அரச சட்டத்தரணி சஜித் பண்டார தெரிவித்தார்.
அதன்படி, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் பிரதிவாதியிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்வதற்கு வசதியாக உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு அரச சட்டத்தரணி நீதிமன்றத்திடம் கோரினார்.
கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மேல் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஸ்ஸங்க, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் பிரதிவாதியிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்வதற்கு பயங்கரவாத விசாணைப் பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார்.