மல்வானை வீடு தொடர்பான வழக்கில் இருந்தும் பசில் விடுதலை
அரச பணத்தை தவறாக பயன்படுத்தி கம்பஹா மாவட்டம் மல்வானையில் காணி ஒன்றை கொள்வனவு செய்து ஆடம்பர வீடு மற்றும் நீச்சல் தடாகத்தை நிர்மாணித்தமை தொடர்பான வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் வர்த்தகர் திருகுமார் நடேசன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
16 ஏக்கர் காணி மற்றும் வீடு
வழக்கின் முதலாவது பிரதிவாதியான பசில் ராஜபக்ச 16 ஏக்கர் காணியை கொள்வனவு செய்வதற்கும், அதில் நீச்சல் தடாகத்துடன் கூடிய ஆடம்பர வீட்டை நிர்மாணிக்கவும் அரச நிதியை தவறாக பயன்படுத்தி துஷ்பிரயோகம் செய்தமை உட்பட மூன்று குற்றச்சாட்டுக்களின் கீழ் சட்டமா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
நீண்டகாலம் நடந்த வழக்கு விசாரணை
கம்பஹா மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைகள் நடைபெற்று வந்தன. வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டதுடன் பிரதிவாதிகளான பசில் ராஜபக்ச மற்றும் திருகுமார் நடேசன் ஆகியோரை வழக்கில் இருந்து முற்றாக விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கு விசாரணைகள் 5 வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பசில் ராஜபக்சவுக்கு எதிராக தொடரப்பட்டிருந்த வழக்குகள் சிலவற்றில் இருந்து அவர் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டார்.
இந்த நிலையில் தற்போது மல்வானை வீடு சம்பந்தப்பட்ட வழக்கில் இருந்தும் பசில் ராஜபக்சவை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.



