நாட்டின் புலனாய்வுப்பிரிவு தோல்வியடைந்துள்ளது: ஆளும் கட்சி அமைச்சர்
நாட்டின் புலனாய்வு பிரிவு தோல்வியடைந்துள்ளதாக ஆளும் கட்சியின் முக்கிய அமைச்சர்களில் ஒருவரான திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியினதும் அவரது பாரியாரினதும் உயிர்களுக்கு ஆபத்து உண்டு என்பதனை புலனாய்வுப் பிரிவினர் கண்டறிந்து சொல்லத் தவறியுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஜனாதிபதியின் மிரிஹான இல்லத்திற்கு அருகாமையில் போராட்டமொன்று நடைபெறவுள்ளதாகப் புலனாய்வுப் பிரிவினர் முன்கூட்டியே தகவல் அறிந்திருந்த போதிலும், தடிகள்,பொல்லுகளுடன் போராட்டக்காரர்கள் பங்கேற்பார்கள் என்பதனை கண்டறியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, மிரிஹான சம்பவத்தின் போது புலனாய்வுப் பிரிவினர் தோல்வியடைந்துள்ளனர் எனவும், புலனாய்வுப் பிரிவினை மறுசீரமைக்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலின் போது இது தலைகீழாக நடந்தேறியது என அவர் தெரிவித்துள்ளார்.
புலனாய்வுப் பிரிவினர் தாக்குதல் பற்றிய தகவல்களைக் கண்டறிந்த போதிலும் பாதுகாப்பு தரப்பினர் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி ஊடகப் பிரிவில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த நல்லாட்சி அரசாங்கம் புலனாய்வு பிரிவினை மலினப்படுத்தியதாகவும் தமது அரசாங்கம் புலனாய்வுப் பிரிவினை பலப்படுத்தும் என்ற உறுதிமொழியுடன் தற்போதைய அரசாங்கம் ஆட்சி பீடம் ஏறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.