அரசாங்கத்தின் தேவை முடியும் வரை நாடு முடக்கப்படமாட்டாது! - ஹர்ஷன ராஜகருணா
அரசாங்கத்தின் தேவை காரணமாக, அரசாங்கம் நாட்டை முடக்கப்போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா இதனை தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.
துறைமுக நகர திட்டம் தொடர்பான யோசனையை அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு இருக்கின்றது. இதன் காரணமாக அரசாங்கம் நாட்டை முடக்கப்போவதில்லை என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
எவ்வாறாயினும், குறித்த யோசனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதும் நாட்டை முடக்குவதற்கான வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.
இதேவேளை, சினோஃபார்ம் தடுப்பூசி 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் வழங்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்திருந்தார்.
எனினும், இது தொடர்பான உத்தரவு இன்னும் எழுத்துப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்று ஹர்ஷன ராஜகருணா மேலும் தெரிவித்துள்ளார்.