நாடு அபிவிருத்தியடையும் போது ஜனாதிபதிக்கு 99 வயது-எனக்கு 97 வயது-சரத் பொன்சேகா
நாடு அபிவிருத்தியடையும் எனக்கூறும் 2048 ஆம் ஆண்டு ஆகும் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு 99 வயதாகி விடும் என்பதுடன் தனக்கு 97 வயதாகி விடும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று வரவு செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இளையோரின் உரிமைகளுக்கு குரல் கொடுப்போரை அடக்க முயற்சி
இளம் தலைமுறையினரை பாதுகாக்க வேண்டும் என வரவு செலவுத்திட்டத்தில் கூறப்பட்டுள்ளது. எனினும் உண்ணவும் குடிக்கவும் இல்லாத நாட்டில் நாட்டின் இளையோரின் உரிமைகள் பற்றி பேசும் இளைஞர்,யுவதிகளை பொலிஸ் வன்முறையாளர்களை பயன்படுத்தி தாக்கி, அடக்க முயற்சிக்கின்றனர்.
நாட்டை சரியாக வழிக்கு கொண்டு வரும் வரை அந்நிய செலாவணியை அனுப்புவதை தவிர்க்குமாறு வெளிநாடுகளில் உள்ள தொழிலாளர்களிடம் கோரிக்கை விடுக்கின்றேன்.
கழிவறைகளுக்கும் மீட்டர்களை பொருத்தும் காலம் வரலாம்
வறுமை கோட்டின் கீழ் வாழ்பவர்களே பீடி புகைக்கின்றனர். அரசாங்கம் அவர்களின் பைக்குள்ளும் கை வைத்துள்ளது. இதற்கு அடுத்ததாக வெற்றிலை விற்கும் நபர், இளநீர் விற்கும் நபர் மற்றும் சோளம் விற்கும் நபர்களுக்கும் வரிகள் விதிக்கப்படலாம். அத்துடன் பெறுமதி கூட்டல் வரி என்று கழிவறைகளில் மீட்டர்களை பொருத்தும் காலம் வரலாம் எனவும் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.