கிண்ணியாவில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி
திருகோணமலை-கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட அகமட்லேன் பகுதியில் மேலும் இரண்டு கொரோனா தொற்றாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
கடந்த 23ஆம் திகதி பெறப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கை இன்று தமக்குக் கிடைத்துள்ளதாகவும்,அதன்படி 10 வயது சிறுவனுக்கும், 55 வயதுடையவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி ஏ.ஏம்.எம்.அஜித் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதேவேளை, மூதூர் பிரதேசத்தில் இரண்டு பேருக்கும், கோமரங்கடவல சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட எத்தாபெந்திவெவ பகுதியில் 58 வயதுடைய சிறுநீரக நோயாளருக்கு பெறப்பட்ட அன்டிஜென் பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டதாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந் தெரிவித்தார்.
அத்துடன் கடந்த 18 ஆம் திகதி தொடக்கம் இன்று 27ம் திகதி வரைக்கும் திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக 107 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுகாதாரத் திணைக்களத்தின் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறும்,தேவையற்ற விதத்தில் பிரயாணம் செய்ய வேண்டாம் எனவும், திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள்பணிப்பாளர் வீ.பிரேமானந் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.