ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கொரோனா
அனுராதபுரம் கொரோனா சிகப்பு வலயமாக மாறியுள்ளதாகவும் பாடசாலை மாணவர்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்றியுள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தயின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார (Rohana Bandara) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று வரவு செலவுத்திட்டம் தொடர்பான குழு நிலை விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் கொரோனா நோயாளிகளாக மாறியுள்ளனர்.
அத்துடன் அனுராதபுரம் நகரம் மற்றும் கிராமப்புறங்களில் ஏனைய நாட்களை விட தற்போது அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். கொரோனா தொற்று காரணமாக நேற்றைய தினம் மாத்திரம் அனுராதபுரம் நகரில் நான்கு பேர் உயிரிழந்தனர் எனவும் ரோஹன பண்டார குறிப்பிட்டுள்ளார்.
நீர்பாசன அமைச்சர் சமல் ராஜபக்சவிடம் கேள்வி ஒன்றை முன்வைத்து உரையாற்றும் போதே ரோஹன பண்டார இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.
அனுராதபுரத்தல் கொரோனா பரிசோதனைகள் நடத்தப்படுவது குறைக்கப்பட்டுள்ளதால், பரிசோதனைகளை அதிகரிக்குமாறு கோருகிறேன். தடுப்பூசிகளுக்கு மாத்திரம் வரையறுத்து பணியாற்ற வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் எனவும் பண்டார குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் சமல் ராஜபக்ச, இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வருவதாக கூறியுள்ளார்.