முதியோர் காப்பகம் ஒன்றில் 50 பேருக்கு கோவிட் தொற்று! மூவர் மரணம்
வவுனியாவில் உள்ள முதியோர் காப்பகம் ஒன்றில் 50 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த காப்பகத்தில் கோவிட் தொற்று காரணமாக மூவர் மரணமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.
வவுனியா, பம்பைமடு பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தை சேர்ந்த இருவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோவிட் தொற்றால் மரணமடைந்த நிலையில், இன்றும் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
அத்துடன், குறித்த காப்பகத்தில் இருப்பவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 50 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், வவுனியா - ஓமந்தை பகுதியில் இடம்பெற்ற ஆலயத்திருவிழாவில் கலந்துகொண்ட பலருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து பலர் தனிமைப்படுத்தப்பட்டனர்.
குறித்த ஆலயத்தில் திருவிழா இடம்பெற்வருவதுடன் அதிகமானோர் கலந்து கொண்டுள்ளதாக சுகாதார தரப்பினருக்கு முறைப்பாடு அளி்க்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து குறித்த ஆலயத்திற்கு நேற்றையதினம் சென்ற சுகாதார பிரிவினர் அங்கு நின்றிருந்தவர்களிற்கு அன்டிஜன் பரிசோதனையினை முன்னெடுத்தனர்.
இதன்போது ஆலயத்தின் குருக்கள் உட்பட6 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து குறித்த நபர்களுடன் தொடர்புகளை பேணியவர்களிற்கு இன்று முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் மேலும் 5 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. தொற்று உறுதியானவர்கள் அவர்களது குடும்பங்களுடன் தனிமைப்படுத்தலிற்குள்ளாக்கப்பட்டுள்ளனர்.