இலங்கையில் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள கோவிட் தொற்று! - இன்றும் 43 மரணங்கள் பதிவானது
இலங்கையில் மேலும் 43 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, இலங்கையில் கோவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1527 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 20ம் திகதி முதல் இன்று வரையில் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்று ஒரு கோவிட் மரணம் பதிவாகியுள்ளது. மே 20ம் திகதி முதல் 31ம் திகதி வரையில் 42 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.
அந்த வகையில், 20ம் திகதி ஒருவரும், 21ம் திகதி ஒருவரும், 23ம் திகதி ஒருவரும், 25ம் திகதி இருவரும், 26ம் திகதி இருவரும், 27ம் திகதி மூவரும், 28ம் திகதி ஆறு பேரும், 29ம் திகதி ஒன்பது பேரும், 30ம் திகதி 15 பேரும், 31ம் திகதி இருவருமாக உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 12 பெண்களும், 31 ஆண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்களின் 30 - 39 வயதுக்குட்பட்டவர்கள் இருவரும், 40 - 49 வயதுக்குட்பட்டவர்கள் இருவரும், 50 - 59 வயதுக்குட்பட்டவர்கள் ஆறு பேரும், 60 - 69 வயதுக்குட்பட்டவர்கள் 16 பேரும், 70 - 79 வயதுக்குட்பட்டவர்கள் பத்து பேரும், 80 - 89 வயதுக்குட்பட்டவர்கள் ஆறு பேரும், 90 - 99 வயதுக்குட்பட்டவர்கள் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த 43 பேரில் ஏழு பேர் வீட்டிலேயும், மிகுதி 36 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.