போலி மருத்துவ சான்றிதழை சமர்ப்பித்து வெளிநாடு சென்ற கொரோனா தொற்றாளர்
கம்பஹா - ஹென்டேரமுல்லை பிரதேசத்தை சேர்நத கொரோனா தொற்றாளர் ஒருவர், போலியான மருத்துவ சான்றிதழை சமர்ப்பித்து வெளிநாடு சென்றுள்ளதாக மஹர பிரதான வைத்திய அதிகாரி மருத்துவர் நிஹால் கமகே தகவல் வெளியிட்டுள்ளார்.
இந்த நபர் தனியார் மருத்துவமனை ஒன்றில் இரண்டு PCR பரிசோதனைகளை செய்துக்கொண்டுள்ளதுடன் ஒன்றில் கொரோனா தொற்றாளர் எனவும் மற்றொன்றில் கொரோனா தொற்றாளர் அல்ல எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி மற்றுமொரு PCR பரிசோதனையின் முடிவுகள் கிடைத்த பின்னர், வெளிநாடு செல்ல தேவையான மருத்துவ சான்றிதழ்கள் வழங்கப்படவிருந்தது. எனினும் எனினும் மருத்துவ அறிக்கையை கடந்த 30 ஆம் திகதி கிடைத்துள்ளதுடன் அவர் கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதனையடுத்து கொரோனா தொற்றாளரான இந்த நபரை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்காக பிரதேச சுகாதார பணிப்பாளர் அவரது வீட்டுக்கு சென்றுள்ளார். அந்த நபர் கடந்த 29 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக வெளிநாடு சென்றுள்ளதாக அப்போது தெரியவந்துள்ளது.
போலி மருத்துவ சான்றிதழை சமர்ப்பித்து அந்த நபர் வெளிநாடு சென்றுள்ளதாக தாம் நம்புவதாக கம்பஹா மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் மிகார ஹெபா கூறியுள்ளார்.
இந்த நபர் சுகாதார துறையினரின் பரிந்துரைகள் இன்றி எவ்வாறு வெளிநாடு சென்றார் என்பது பிரச்சினைக்குரியது எனவும் இது குறித்து பொறுப்புக் கூற வேண்டிய தரப்பினருக்கு அறிவிக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.