நிபுணர்களின் ஆலோசனைகளுக்கு அமைய கொரோனா தொடர்பான தீர்மானங்கள்: சரத் வீரசேகர
நிபுணர்களின் ஆலோசனைகளுக்கு அமையவே கொரோனா தொடர்பான தீர்மானங்கள் எடுக்கப்படும் என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
நாட்டின் நலனை கருத்திற் கொண்டு எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு அனைத்து சமூகங்களும் இணங்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
கொவிட் தொற்றினால் மரணிப்போரை தகனம் செய்வதா அல்லது அடக்கம் செய்வதா என்ற விவகாரம் தொடர்பில் அரசாங்கம் தீர்மானங்களை எடுக்காது.
அது குறித்து நிபுணர்களே தீர்மானிப்பார்கள்.அனைத்து இன சமூகங்களும் சுகாதார பழக்க வழக்கங்களை பின்பற்ற வேண்டும்.
சுகாதார அவசர நிலைமைகளின் போது மக்கள் தன்னிச்சையாக செயற்படக் கூடாது. நாட்டின் பாதுகாப்பையும், மக்களின் நலனையும் உறுதி செய்வதற்கு அரசாங்கம் சில தீர்மானங்களை எடுப்பதற்கு தயங்காது என குறிப்பிட்டுள்ளார்.