மகிந்த திருப்பதி சென்ற ஜெட் விமானம் யாருடையது? எங்கிருந்து வந்தது? வெளிவரும் பல்வேறு தகவல்கள் - அடுத்த சர்ச்சை
நாட்டில் டொலர் இல்லாத நேரத்தில் பிரதமர் மகிந்த ராஜபக்ச தனியான ஜெட் விமானத்தில் திருப்பதி செல்ல எங்கிருந்து பணம் கிடைத்து என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார (Manusha Nanayakara) கேள்வி எழுப்பியுள்ளார்.
டொலர் இல்லை எனக் கூறி, துபாய் நாட்டுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை இரத்துச் செய்துள்ள பிரதமருக்கு திருப்பதிக்கு செல்ல முடிந்தது எவ்வாறு எனவும் அவர் கேட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த கேள்விகளை எழுப்பியுள்ளார்.
2021 ஆம் ஆண்டு திருப்பதிக்கு சிலர் தனிப்பட்ட ஜெட் விமானத்தில் சென்ற வருடம். நாம் புதிய வாகனம் ஒன்றை கொள்வனவு செய்தால், கதிர்காமத்திற்கு செல்வோம் என சமூக ஊடகங்களில் கூறப்பட்டுள்ளது.
சிலர் வாகனங்களை கொள்வனவு செய்யும் தமது வசதிக்கு ஏற்ற வகையில் திருப்பதி செல்லும் சந்தர்ப்பங்கள் உள்ளன. இது அப்படியான ஒன்றா என சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பபட்டு வருகிறது.
இந்த ஜெட் விமானம் சென் மரினோ நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சென் மரினோ என்ற நாடு இத்தாலிக்கு கீழே இருக்கும், வரி விலக்கு வழங்கப்படும், விரும்பிய அனைத்தையும் செய்யக் கூடிய பணத்தையும் இரகசியமாக ஒழித்து வைக்கக் கூடிய நாடு.
சில குடும்பங்களை சேர்ந்தவர்கள் இத்தாலிக்கு சென்றிருந்த போது, வீட்டுக்கு சென்று வந்தது போல் சென்று வந்த கதைகளை கடந்த காலங்களில் எம்மால் கேட்க முடிந்தது.
அங்கிருந்து சிங்கப்பூர் வழியாக கொழும்புக்கு வந்தனர். மேலும் சிலர் வேறு நாடுகளுக்கு வந்தனர். சென் மரினோவுக்கு சென்ற முதல் சந்தர்ப்பமும் இதுவல்ல. இதற்கு முன்னர் சில நபர்கள் சென் மரினோவுக்கு அங்குள்ள வங்கிகளுக்கு சென்று வந்தமை குறித்த தகவல்கள் எமக்கும் கிடைத்திருந்தன.
சென் மரினோவில் பதிவு செய்யப்பட்ட விமானத்தையே இந்தியாவில் இருந்து வாடகைக்கு பெற்றதாக இவர்கள் கூறுகின்றனர். எனினும் இந்த விமானம் உகண்டாவில் இருந்து இலங்கைக்கு வந்தது.
இலங்கை வந்த பின்னரே இந்தியாவுக்கு சென்றது. அப்படியானால், இந்த விமானத்திற்கும் உகண்டாவுக்கும் உள்ள தொடர்பு என்ன?. உகண்டாவுக்கான இலங்கையின் தூதுவராக கடமையாற்றிய கணநாதன் என்பவரே இந்த விமானத்தில் வந்தார்.
இது எனது தந்தைக்கு இலவசமாக, பரிசாக வழங்கப்பட்டது என்று தற்போது கூறுகின்றனர். பரிசாக வழங்கப்பட்டது விமான பயணமா அல்லது விமானமா?. பிரச்சினை இருக்கின்றது.
இதுவும் அந்த டெய்சி ஆச்சியின் மாணிக்கக்கல் பொதி போன்ற கதை போல் வெளியில் வந்துள்ளது. விமானம் இந்தியாவில் இருந்து வந்திருந்தால், சிறிய தூரம். எனினும் ஆயிரக்கணக்கான தூரம் கடந்து உகண்டாவுக்கு சென்று இலங்கைக்கு வந்துள்ளது.
இலங்கை மக்களுக்கு பால் மா, எரிபொருள் உணவை இறக்குமதி செய்ய பணமில்லை. இப்படியான சூழ்நிலையில் விமானத்தில் திருப்பதி செல்ல மில்லியன் கணக்கில் டொலர்களை செலவிட யாரிடம் பணம் இருக்கின்றது?.
அந்த பணம் நாட்டிற்குள் இருந்து செல்லவில்லையா?. பாரதூரமான பிரச்சினை. இலங்கையின் தூதுவராக கடமையாற்றிய கணநாதன் என்பவரே விமானத்தை கொண்டு வந்தார். அப்படியானால், இது அவருடைய விமானமா?. அப்படியானால், அதன் உரிமையாளர் யார்?. சிலர் அந்த விமானம் கணநாதனுடையது எனக் கூறுகின்றனர்.
உண்மையில் விமானம் யாருடையது, அரசாங்கம் பதிலளிக்க வேண்டும். அந்த தகவலை வெளியிடவில்லை என்றால், ஏன் அந்த தகவலை வெளியிடவில்லை?. ஜெட் விமானம் வாடகைக்கு பெறப்பட்டிருந்தால், செலுத்தப்பட்ட தொகை எவ்வளவு?. தனிப்பட்ட விமானம் இலவசமாக பெற்றுக்கொள்ளப்பட்டிருந்தால், அது எப்படி பெறப்பட்டது?.
அதனை இலவசமாக வழங்குவதற்கான காரணம் என்ன?. எவராது இலவசமாக எதனையும் வழங்கும் போது அதற்கான காரணம் இருக்க வேண்டும். லஞ்சமாகவே வழங்கப்படும். விமானம் தூதுவருக்கு சொந்தமானது என்றால், அதனை கொள்வனவு செய்ய அவருக்கு எப்படி பணம் கிடைத்தது?.
இவர் இலங்கையின் தூதுவர். இலங்கையின் தூதுவர் என்பதால், சட்டப்படி அவரிடம் இது பற்றி விசாரணை நடத்த முடியும். ஏன் இது குறித்து விசாரணை நடத்தவில்லை?.
இந்த கேள்விகளுக்கு அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் என நாங்கள் கோருகிறோம். இப்படியான சூழ்நிலையிலேயே டொலர் இன்றி வெளிநாடுகளில் உள்ள நாட்டின் தூதரகங்கள் மூடப்படுகின்றன.
துபாய் பயணத்தை இரத்துச் செய்து விட்டு, டொலர் இல்லாத காரணத்தினால், தனது வெளிநாட்டு பயணங்களையும் இரத்துச் செயவதாக பிரதமர் கூறுகிறார்.
இது உத்தியோகபூர்வ பயணம், எனினும் திருப்பதிக்கு செல்ல முடியும். சொந்த பணத்தில் சென்றதாக கூறினார்கள். அந்த சொந்த பணம் எங்கிருந்து கிடைத்தது. மெதமுலன வளவில் உள்ள தேங்காய்கள் மூலம் கிடைத்ததா எனவும் மனுஷ நாணயக்கார கேள்வி எழுப்பியுள்ளார்.