சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் தொடர்பில் எழுந்துள்ள புதிய சர்ச்சை
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகள் தொடர்பில் குற்றச்சாட்டு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் விசனம்
இதற்கமைய, சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவாதாக சுத்திகரிப்பு நிலையத்துக்கு அண்மையில் வசித்து வரும் பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கடந்த சில நாட்களாக சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வீசும் அதிக துர்நாற்றம் காரணமாக தமது அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
அதிகாரிகளிடம் முறைப்பாடு
இந்தவிடயம் தொடர்பாக சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அதிகாரிகளுக்கு தெரியப்படுதியுள்ளதாக பியகம பிரதேச சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வெளியேறும் புகையில் கந்தகத்தின் அளவு அதிகரித்துள்ளமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தரமற்ற மசகு எண்ணெய்
இறக்குமதி இதேவேளை, இலங்கைக்கு தரமற்ற மசகு எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் அதன் மூலம் குறித்த துர்நாற்றம் வீசலாம் எனவும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்திருந்தார்.
ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் இதனை குறிப்பிட்டிருந்தார்.
குறித்த கருத்தை மறுத்திருந்த மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, ஆணைக்குழுவின் தலைவருக்கு எதிராக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.