சண்டித்தனமான அரசியல் இலங்கையில் தொடர்ந்தும் செல்லாது - அனுரகுமார திஸாநாயக்க
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனக்கு இரண்டு கதாபாத்திரங்கள் இருப்பதாக கூறியிருந்ததன் மூலம் அவர் இரட்டை நிலைப்பாடுகளை கொண்டவர் என்பதை காட்டுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கம்பஹாவில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இரட்டை கதாபாத்திரங்களை கொண்ட நபர்களை கிராமங்களில் இரட்டை நாவுள்ளவர்கள் என அழைப்பார்கள். நேர்மையான மனிதனுக்கு ஒரு கதாபாத்திரம் மாத்திரமே இருக்க முடியும். நேர்மையற்ற மனிதனுக்கு இரண்டு கதாபாத்திரங்கள் இருக்க முடியும்.
அத்துடன் முடிந்தால், தனக்கு தனது பழைய கதாபாத்திரத்திற்கும் உயிரூட்ட முடியும் எனவும் அவர் கூறுகிறார்.
தான் தற்போது அப்பாவி கதாபாத்திரத்தை கொண்டுள்ளதாகவும் முடிந்தால் அங்குலிமாலாவின் கதாபாத்திரத்திற்கும் உயிரூட்ட முடியும் என்ற அர்த்ததில் கூறுகின்றார். பிரபாகரனை கொன்ற விதம் பற்றி கூறி, தேவையானால் அப்படியான கதாபாத்திரத்திற்கும் தன்னால் உயிரூட்ட முடியும் என்கிறார்.
இது சாதாரண விடயமல்ல. யார் இவர் நாட்டின் ஜனாதிபதி. இதனை கூறியது சாதாரண மனிதன் அல்ல நாட்டின் ஜனாதிபதி. ஜனாதிபதி இந்த அளவுக்கு ஆத்திரப்பட்டு, எதனை நோக்கமாக கொண்டு இதனை தெரிவித்துள்ளார்?. ஜனாதிபதி தனது முழுப் பெயரை கூறியதன் காரணமாகவே மிகவும் கோபமடைந்துள்ளார். நந்தசேன கோட்டாபய ராஜபக்ச என்று கூறியதால் ஆத்திரமடைந்துள்ளார்.
முழுப் பெயரை கூறியது உறுப்பினரின் தவறா, கோட்டாபய ராஜபக்சவுக்கு தனது பெயர் தொடர்பில் பிரச்சினை இருந்தால், அந்த பெயரை அவர் மாற்றி இருக்க முடியும். அது அவரது பெயர். அதில் என்ன தவறு இருக்கின்றது.
சமூகத்தை அச்சுறுத்தி, மேற்கொள்ளப்படும் சண்டித்தன அரசியல் இலங்கையின் அரசியலில் தொடர்ந்தும் செல்லுப்படியாகாது எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளளார.