மட்டக்களப்பில் தொடரும் நில அபகரிப்பு
கடந்த சில வருடங்களாக மட்டக்களப்பு - மாதவனை, மயிலத்தமடு மேச்சல் தரை காணி தொடர்பாக பல பிரச்சினைகள் இடம்பெற்றிருந்த நிலையில் இன்றும் சிலர் நிலங்களை அபகரிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கால்நடைகளின் மேய்ச்சல் தரையாக அடையாளப்படுத்தப்பட்ட குறித்த காணிகளை விவசாயம் செய்வதற்காக சிங்கள மக்களுக்கு ஆளுநரினால் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த வகையில் , மாதவனை மைலத்தமடு மேய்ச்சல் தரை காணி தொடர்பாக கடந்த காலங்களில் பல கசப்பான சம்பவங்கள் இடம்பெற்றிருந்தது.
இதன்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மற்றும் சட்டத்தரணி சுகாஸ் ஆகியோர் தலைமையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்ற தடையுத்தரவை பெற்றிருக்கின்ற போதிலும் இன்றைய தினமும் அதிகளவான காணிகள் கபளீகரம் செய்யும் நடவடிக்கையில் சிலர் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக தமிழர் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்களை குடியமர்த்துவதற்கு ஆளுநரின் தலைமையில் பல திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் இது பேசுபொருளாக காணப்பட்டிருந்தது.
இருந்தபோதிலும் அத்துமீறிய குடியேற்றங்கள் இன்று வரை தொடர்ந்த வண்ணமே இருந்து கொண்டிருக்கின்றது.
கடந்த காலங்களிலும் மேச்சல் த்தரை காணி தொடர்பாக உண்மையான தகவல்களை வெளிக் கொணர்ந்த ஊடகவியலாளர்களும் அச்சுறுத்தப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு அவர்களும் நிர்க்கதியான நிலையில் இருக்கின்ற நிலையில் திட்டமிட்ட நில அபகரிப்பு இடம்பெற்று வருவதாக பண்ணையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடனடியாக இதற்கான தீர்வை பெற்றுத்தர வேண்டும் என்று பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.













