முறிஞ்சாறு பாலத்தின் நிர்மாணிப்பு பணி தொடர்பில் முக்கிய தீர்மானம்
கிண்ணியா பிரதேசத்தின் நீண்டகாலப் பிரச்சினைகளான வைத்தியசாலை மற்றும் பிரதான வீதி அபிவிருத்தி ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளித்து, தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்திற்குள் அவை முழுமையாக நிறைவு செய்யப்படும் என வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பிரதி அமைச்சரும், மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான அருண் ஹேமச்சந்திரா உறுதியளித்துள்ளார்.
கிண்ணியா பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று(01.07.2026) கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.முஹம்மது கனியின் ஒருங்கிணைப்பின் கீழ், பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தலைமையில் இடம்பெற்ற போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தீர்மானங்கள் நிறைவேற்றம்
இதன்போது, திருகோணமலை - மட்டக்களப்பு வீதியில் அமைந்துள்ள முறிஞ்சாறு பாலத்தை விரைவாக நிர்மாணிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், சில முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளன.
கிண்ணியா வைத்தியசாலையை புதிய இடமொன்றில் நிர்மாணிப்பதற்காக அவசியமான மண் பரிசோதனைகளை (Soil Test) மேற்கொள்வது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பிரதேச மின் பாவனையாளர் அலுவலகத்திற்கு நிரந்தரக் கட்டடம் அமைத்தல் மற்றும் காணி அனுமதிப் பத்திரங்களுக்கு விண்ணப்பித்து, இதுவரை அவை கிடைக்கப் பெறாதவர்களுக்கான அனுமதிகளை வழங்குவது தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளன.
கல்முனை - அக்கரைப்பற்று பேருந்துச் சேவையினை கிண்ணியா நகரத்திற்குள் பிரவேசித்துச் செல்லும் வகையில் புதிய போக்குவரத்து ஒழுங்குகளை மேற்கொள்வதற்கான முன்மொழிவுகளும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, அரசாங்கத்திடம் தாராளமான அபிவிருத்தி நிதிகள் உள்ளன. அரச திணைக்களங்களின் செயல்பாடுகள் சீராகவும் வேகமாகவும் அமையும் பட்சத்தில், இந்த அபிவிருத்தி நிதிகளை அரசாங்கத்திடமிருந்து விரைவாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

திணைக்களங்களின் தாமதம் பிரதேசத்தின் தடையையே ஏற்படுத்தும் என்பதால் அரச ஊழியர்கள் பொறுப்புணர்ச்சியுடன் செயலாற்ற வேண்டும். இங்கு கலந்துரையாடப்பட்ட விடயங்களுக்கான மதிப்பீட்டு அறிக்கைகளை (Estimates) அரச திணைக்களங்கள் விரைந்து சமர்ப்பிக்க வேண்டும்.
கிண்ணியாவில் நீண்டகாலமாகத் தீர்க்கப்படாதிருக்கும் வைத்தியசாலை மற்றும் பிரதான வீதி அபிவிருத்திகள் இரண்டும் எமது ஆட்சிக் காலத்தில் நிச்சயம் நிறைவுபெறும் என்றார்.
இந்த கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப், கிண்ணியா நகர மற்றும் பிரதேச சபை தவிசாளர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், பிரதேச செயலக பதவி நிலை அதிகாரிகள், அரச திணைக்களத் தலைவர்கள், பொலிஸ் அதிகாரிகள், பொது சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.