அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படும் புலம்பெயர்ந்தோரை ஏற்கும் கொங்கோ
அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படும் பிற நாட்டு புலம்பெயர்ந்தோரை ஏற்றுக்கொள்வதற்கு கொங்கோ ஜனநாயகக் குடியரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த மாதம் முதல் நடைமுறைக்கு வரும் இந்த ஒப்பந்தத்தின் கீழ், கொங்கோ குடிமக்கள் அல்லாதவர்களையும் அந்நாடு வரவேற்கிறது.
இதற்காகத் தலைநகர் கின்ஷாஸாவில் தற்காலிக வரவேற்பு மையங்கள் மற்றும் தங்குமிடங்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் தகவல் தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடுமையான நடவடிக்கை
இந்தத் திட்டத்திற்கான முழுமையான தளவாட மற்றும் தொழில்நுட்ப ஆதரவை அமெரிக்கா வழங்கும் என்றும், கொங்கோ அரசாங்கத்திற்கு இதனால் எந்தவித நிதிச் சுமையும் ஏற்படாது என்றும் அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும், எத்தனை புலம்பெயர்ந்தோர் இவ்வாறு அனுப்பப்படுவார்கள் என்ற விவரத்தை கொங்கோ வெளியிடவில்லை.

எசுவாத்தினி, கானா மற்றும் தெற்கு சூடான் போன்ற ஆப்பிரிக்க நாடுகளைத் தொடர்ந்து, கொங்கோவும் இந்தத் திட்டத்தில் இணைந்துள்ளது.
கடந்த வாரம் கூட, பல்வேறு ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த எட்டு பேர் உகாண்டாவிற்கு அமெரிக்காவால் நாடு கடத்தப்பட்டனர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம், சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்கும் நோக்கில் இத்தகைய கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
நிதி
அமெரிக்க செனட் குழுவின் அறிக்கையின்படி, 2026 ஜனவரி வரை இத்தகைய நாடு கடத்தல் நடவடிக்கைகளுக்காக அமெரிக்கா சுமார் 40 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமாகச் செலவிட்டுள்ளது.
குறிப்பாக எக்குவடோரியல் கினியா, ருவாண்டா, எல் சால்வடார், எசுவாத்தினி மற்றும் பலாவு ஆகிய ஐந்து நாடுகளுக்கு நேரடியாக 32 மில்லியன் டொலர் நிதி வழங்கப்பட்டுள்ளது.

மறுபுறம், கோபால்ட், டான்டலம், லித்தியம் மற்றும் தாமிரம் போன்ற முக்கிய கனிம வளங்களைப் பெறுவதற்காக கொங்கோவுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வரும் சூழலில் இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் ஆர்வலர்கள் இந்த நாடு கடத்தல் கொள்கையின் சட்டபூர்வத் தன்மையைக் கேள்வி எழுப்பி வரும் நிலையில், இது ஒரு நிரந்தர இடமாற்றத் திட்டம் அல்ல என்றும், சர்வதேச ஒருமைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கொங்கோ அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.