மன்னாரில் குடும்பச் சண்டையில் ஒருவர் மரணம்! ஐவர் வைத்தியசாலையில் (Video)
மன்னார் - சாந்திபுரம் பகுதியில் இரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்றைய தினம் (09.04.2023) இடம்பெற்ற இச்சம்பவத்தில், எமில் நகர்ப் பகுதியைச் சேர்ந்த 34 வயதான சத்தியா என்பவர் உயிரிழந்துள்ளார். மேலும் ஐவர் காயமடைந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, நீண்டகாலமாக சாந்திபுரம் பகுதியில் இரு குடும்பத்திற்கு இடையில் நிலவி வந்த பிரச்சினை பொலிஸ் வரை சென்று சமாதனப்படுத்தபட்டுள்ளது.
கூரிய ஆயுதங்களால் தாக்குதல்
இந்த நிலையில், நேற்றைய தினம் (09.04.2023) இரவு குறித்த இரு குடும்பத்திற்கு இடையில் மீண்டும் பிரச்சினை ஏற்பட்ட நிலையில் முரண்பாடு முற்றியுள்ளது.
இதன்போது, பலர் இணைந்து கூரிய ஆயுதங்களால் தாக்குதல் நடத்தியதில் எமில் நகர்ப் பகுதியைச் சேர்ந்த 34 வயதான சத்தியா என்ற நபர் மரணமடைந்துள்ளார்.
விசாரணை
தாக்குதலில் காயமடைந்த பெண் ஒருவர் உட்பட ஐவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொலை செய்ததாகக் கூறப்படும் சந்தேக நபர்கள் தலைமறைவாகியுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.







