கனடாவில் இன்னும் 4 மாதங்களில் தமிழ் புலமைகளுக்கான மாநாடு - வெளியான முக்கிய அறிவிப்பு
“செய்யறிவு உலகில் செம்மொழித் தமிழும் தமிழரும்" எனும் கருப்பொருளில் உலகத் தமிழ் ஆய்வு மாநாடு ஒன்று இடம்பெறவுள்ளது.
இந்த மாநாடு, எதிர்வரும் ஒக்ரோபர் 10ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை கனடா - ரொரண்டோ மாநகரில் நடைபெற உள்ளதாக ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன், பேராசிரியர்களான முனைவர் அ சண்முகதாசு, முனைவர்கி விசாகரூபன், முனைவர் போல் ரொகான், திருமதி விஜிதா திவாகரன் ஆகியோர் இணைந்து யாழ். ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பு ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
மாநாடு நடத்துவதற்கான ஏற்பாடுகள்
இதன்போது, மாநாட்டில் உலகம் முழுவதுமுள்ள அறிஞர்கள், ஆய்வாளர்கள் மற்றும் கல்வியாளர்களை ஒன்றிணைத்துச் செம்மொழித்தமிழ், செய்யறிவு, மெய்ப் பொருளியல், பண்பாடு, புலம்பெயர் வாழ்வு, உலகமயமாதல், வரலாறு, பொருண்மிய மேம்பாடு ஆகிய துறைகளின் இணையிசைவுகளை ஆராய்வதற்கான அறிவியல் தளமாக அமையவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், தமிழ் அறிவியல் மரபுகளின் வரலாற்று ஆழத்தையும் இன்றைய உலகில் அவற்றின் சமகாலப் பொருத்தத்தையும் வெளிப்படுத்தும் பல்துறை உரையாடல்களை ஊக்குவிப்பதே இம்மாநாட்டின் நோக்கமாகும் என்றும் குறித்த ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, தமிழும் செய்யறிவும், மெய்ப்பொருளியலும் பண்பாடும், பொருளியல் சிந்தனையும் வாழ்வியலும், தமிழர் வரலாறும் வாழ்வியலும், வடகிழக்குப் பொருண்மிய மேம்பாடு உள்ளிட்ட தலைப்புகளில் ஆய்வுகளை கோரியுள்ளதுடன், அவை தமிழ் அல்லது ஆங்கிலம் மொழியில் அமையலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
கட்டுரை போட்டிக்கான அறிவுறுத்தல்கள்
அத்துடன், குறித்த ஆய்வுச் சுருக்கம் 250 - 300 சொற்களில் அமைதல் வேண்டும் என்றும் அதைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் 2026.05.25 என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும், அளிக்கப்படும் அனைத்து ஆய்வுச் சுருக்கங்களும் மாநாட்டு ஆய்வுக் குழுவினரால் விரிவாக ஆய்வு செய்யப்பட்டு, இந்த ஆய்வின் அடிப்படையில் தெரிவு செய்யப்படும் ஆய்வுச் சுருக்கங்களை எழுதியோர் ஆய்வுக் கட்டுரை எழுதுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து ஆய்வாளர்களுக்கும் அவரவர் ஆய்வுச் சுருக்கத் தேர்வு பற்றிய முடிவு 2026.06.30 ஆம் நாளுக்குள் அறிவிக்கப்படவுள்ளது. இதன்படி, முழுமையான ஆய்வுக் கட்டுரைகள் 3000 சொற்களுக்கு மிகையாகாமல் இருத்தல் அவசியம், இந்த கட்டுரைகளை 2026.08.31ஆம் திகதிக்கு முன்னர் இணையத்தள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் இந்தியக் கட்டுரையாளர்களுக்குக் கனடா சென்று வருவதற்கான வான்வழிச் செலவுச் சீட்டும் கனடாவில் தங்குமிட வசதிகளும் வழங்கப்படவுள்ளது.
இதேவேளை, மாநாடு பற்றிய கூடுதல் விளக்கங்களை www.GlobalTamilConference.org என்னும் இணைய தளத்தில் பார்வையிட முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிந்தாமணியின் சூழ்ச்சி.. சொந்த வீட்டை விட்டு வெளியேறும் அண்ணாமலை குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam