சம்மாந்துறையில் நிபந்தனையுடன் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட போராட்டம்
சம்மாந்துறையில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போவை குறித்த இடத்திலேயே நிரந்தரமாக வைக்குமாறு கோரி சம்மாந்துறை இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் நிபந்தனையுடன் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போவை குறித்த இடத்திலேயே நிரந்தரமாக வைக்குமாறு கோரி சம்மாந்துறை இளைஞர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை (16) அந்த சாலைக்கு முன்னால் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அதன்போது சம்பவ இடத்திற்கு வருகை தந்த இ.போ.சபையின் கிழக்கு பிராந்திய செயலாற்று முகாமையாளர் எம்.ஏ உவைஸ், உட்பட அரச உயர் அதிகாரிகள், சம்மாந்துறை பேருந்து டிப்போவை, கல்முனை பேருந்து டிப்போ நிலையத்துடன் இணைக்கவில்லை எனவும் நிர்வாக ரீதியான நடவடிக்கை மாத்திரம் நடைபெறுவதாகவும் விளக்கமளித்துள்ளனர்.
ஆனால் அவ்வாறு இடம்பெறாததால் இன்று (18) சம்மாந்துறை பேருந்து போக்குவரத்து சபைக்கு முன் மீண்டும் இளைஞர்கள் கூடி இரண்டாவது நாளாகவும் ஆட்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு வருகை தந்த சம்மாந்துறை பள்ளிவாசல்கள் நம்பிக்கையாளர் சபை தலைவர் மௌலவி யூ.எல்.மஹ்ரூப், அரசியல் மேல் மட்டத்தில் தமக்கு வழங்கப்பட்ட உறுதிமொழிகளை ஆர்ப்பாட்டக்காரர்களிடம் விளக்கி எதிர்வரும் செவ்வாய்கிழமையளவில் முடிவை தருவதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் நம்பிக்கைகொண்டு ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்து சென்றதுடன் ,செவ்வாய் கிழமை வரையும் ஒரு செயற்பாடுகளும் நடைபெறாத பட்சத்தில் மீண்டும் புதன் கிழமை தொடக்கம் நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை வீதிக்கு களம் இறங்கபோவதாக ஆர்ப்பாட்டகாரர்கள் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பில் வினவ இ.போ.சபை கிழக்கு பிராந்திய செயலாற்று முகாமையாளர் எம்.ஏ.உவைஸ் அவர்களின் அலுவலகத்திற்கு சென்று ஊடகவியலாளர்கள் வினவிய போது துரிதகதியில் இந்த சாலைக்காக ஒதுக்கப்பட்டுள்ள வங்களாவடி பிரதேச காணியில் நிரந்தர தீர்வை வழங்கும் நோக்கில் இந்த டிப்போவை அமைக்கவுள்ளதாகவும், எரிபொருள் நிரப்பு நிலையம் அமைத்தல், நிலத்தை சீரமைத்தல், சுற்றுவேலி அமைத்தல் போன்ற பணிகளை செய்து உடனடியாக இவ்விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், விரைவில் இந்த வேலைகளை பூர்த்தி செய்து இ.போ.சபை உயர் அதிகாரிகளை கொண்டு உத்தியோகபூர்வமாக திறக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
