அரசின் அராஜகம் தமிழர்களை ஓரணியில் மீண்டும் அணிதிரள்வதை விரைவுபடுத்தும்! - சிறிகாந்தா
அடக்குமுறையைப் பிரயோகித்து தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை நசுக்குவதற்கு அரசு தொடர்ந்து முயற்சிப்பது ஒருபோதும் வெற்றி அளிக்காது. பிரிந்து நிற்கும் தமிழ் மக்கள் ஒரு கொடியின் கீழ் மீண்டும் அணிதிரள்வதை அது விரைவுபடுத்தும் என தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிரேஷ்ட சட்டத்தரணி என்.சிறிகாந்தா (N. Sirikanta) தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் பொலிஸாரின் இந்த அராஜகத்தைத் தமிழ்த் தேசியக் கட்சி வன்மையாகக் கண்டிக்கின்றது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் கஜேந்திரன் எம்.பியின் கைது தொடர்பில் வெளியிட்டுள்ள கண்டனத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்த முற்பட்ட வேளை யாழ். பொலிசாரினால் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.