விஜேதாச ராஜபக்ச குடும்பத்தின் சொத்துக்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரிக்கை
முன்னாள் அமைச்சர் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ச மற்றும் அவரது மகன் ரகித ராஜபக்ச உள்ளிட்ட குடும்பத்தினரின் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஊழல் மற்றும் மோசடிக்கு எதிரான பிரஜைகள் சக்தி என்ற அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த அமைப்பு நேற்றைய தினம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இது தொடர்பான முறைப்பாட்டை சமர்ப்பித்துள்ளது.
சொத்துக்களை அரசுடமையாக்க
விஜயதாச ராஜபக்ச மற்றும் அவரது மகன் ரகித ராஜபக்ச உள்ளிட்ட குடும்பத்தினரின் சொத்துக்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட நபர்கள் சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை ஈட்டியிருந்தால், அந்த சொத்துக்களை அரசுடமையாக்கி, அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு அந்த அமைப்பின் தலைவர் சமந்த துஷார, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் வலியுறுத்தியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் விஜேதாச ராஜபக்சவின் மகன் ரகித ராஜபக்ச பாதாள உலகக் குழு தலைவர்களில் ஓருவரான ஹரக் கட்டா என்பவரிடம் பாரியளவு தொகை பணத்தை கையூட்டலாக பெற்றுக் கொண்டார் என குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.