புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் இணக்க சபை உறுப்பினருக்கு எதிராக முறைப்பாடு
வவுனியா வடக்கு புளியங்குளம் பழையவாடியில் வசித்துவரும் பெண் இணக்க சபை உறுப்பினர் ஒருவருக்கு எதிராக புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் ஐம்பது பேருக்கு மேற்பட்ட பொதுமக்கள் ஒன்றிணைந்து கையெழுத்திட்டு முறைப்பாடு ஒன்றினை இன்று மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர் .
அம்முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
புளியங்குளத்திலிருந்து பழையவாடிக்கு செல்லும் பிரதான வீதி ஜப்பான் அரசின் நிதி உதவியில் சீமெந்து வீதியாகப் புனரமைப்புச் செய்யப்பட்டு வருகின்றது .
அப்பகுதியில் வசித்து வரும் இணக்க சபை பெண் உறுப்பினர் ஒருவர் குடியிருக்கும் காணியைக் குறித்த வீதி புனரமைப்புக்கு விட்டுக்கொடுக்க முன்வரவில்லை. இதனால் குறித்த வீதி புனரமைப்பு செய்யப்படுவதில் நீண்டகால தாமதங்கள் ஏற்பட்டு வருகின்றது.
அத்துடன் அவர் வசித்துவரும் காணியின் ஒரு பகுதியை வீதி புனரமைப்பு செய்வதற்கு விட்டுக்கொடுப்பதில் விடாப்பிடியாகவும், தனது இணக்க சபை உறுப்பினர் என்ற பதவியைப் பயன்படுத்தி பல்வேறு அழுத்தங்களையும், முரண்பாடுகளையும் அங்கு வசித்து வரும் மக்கள் மீது மேற்கொண்டு வருகின்றார்.
எனவே இப்பகுதியில் வசித்து வரும் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து குறித்த இணக்க சபை உறுப்பினருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை மேற்கொள்ளப்பட்டு இதனைத் தீர்த்துக் கொள்வதற்கு முன்வந்துள்ளதாகவும் இவ் முறைப்பாட்டின் பிரதிகள் நெடுங்கேணி பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபை ஆகியவற்றிற்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.