சிறைச்சாலை சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதியரசர் தலைமையில் விசாரணைக்குழு
இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே வெலிகடை மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலைகளுக்கு நண்பர்களுடன் சென்றார் என கூறப்படும் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் தலைமையில் சுயாதீன விசாரணை குழுவை நியமிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக நீதியமைச்சர் அலி சப்றி இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இந்த சம்பவத்தை கண்டிப்பதாகவும் இப்படியான சம்பவங்கள் நடக்கக்கூடாதது. சம்பவத்தை எதிர்நோக்கியவர்கள் அவர்களின் குடும்பத்தினர் எதிர்நோக்கிய சிரமங்கள் குறித்து கவலையடைவதாகவும் அலி சப்றி கூறியுள்ளார்.
இந்த சம்பவத்திற்கு அரசியல் சாயமோ, இனவாத அர்தத்தையோ கற்பிக்க முயற்சிக்க கூடாது. இது அப்படியான சம்பவம் அல்ல. இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே விசாரணை நடத்தப்படுகின்றது.
மனித உரிமை ஆணைக்குழு இது சம்பந்தமாக விசாரணை நடத்துகின்றது எனவும் நீதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் போது கருத்து வெளியிட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ராஜாங்க அமைச்சர் அமைச்சர் பதவியை தொடர்ந்தும் வகிக்க இடமளிக்க போவதில்லை என அரசாங்கம் உறுதி வழங்குமா என கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன் அவரை நாடாளுமன்றத்தில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என கேள்வி எழுப்பிய பொன்னம்பலம், அனுராதபுரம் சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாற்றி மெண்டேலா சட்டம் பாதுகாக்கப்படும் என உறுதிமொழி வழங்கப்படுமா என கேட்டுள்ளார்.