வடக்கின் ஆளுநர் தெரிவித்துள்ள கருத்து மிகுந்த மன வேதனையை தந்துள்ளது: வேலணை பிரதேச சபை(Photos)
யாழ். தீவகப் பெண்கள் தொடர்பில் வடக்கின் ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ள கருத்து மிகுந்த மன வேதனையைத் தந்துள்ளது என வேலணை பிரதேச சபையின் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்தகைய கருத்தைத் தாம் வன்மையாகக் கண்டிப்பதாக’ தெரிவித்துள்ளதுடன், எழுந்தமானதாக இருக்கின்ற பிரச்சினைகளை விடுத்து புதிய பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும் முகமாகவும் கருத்துக்களை ஒரு ஆளுநர் தெரிவித்திருப்பதானது அவரது அந்தப் பதவிக்கும் அப்பதவி ஏற்படுத்தியிருக்கும் விம்பத்துக்கும் பொருத்தமாக இருப்பதாகக் கருதவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
வேலணை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்றையதினம் (24) தவிசாளர் கருணகரகுருமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
இதன்போது பிரதேசத்தின் பல்வேறு அபிவிருத்திகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் உறுப்பினர்களால் சுட்டிக்காட்டப் பட்டிருந்ததுடன், அவற்றுக்கான தீர்வுகள் குறித்தும் ஆராயப்பட்டது.
இந்நிலையில் சபையின் உறுப்பினர் மேரி மரில்டா ஆளுநர் தெரிவித்ததாக வெளியான செய்தியைச் சுட்டிக்காட்டிக் கண்டன தீர்மானம் ஒன்றைக் கொண்டுவந்திருந்தார்.
இதன்போதே சபையின் அனைத்து உறுப்பினர்களாலும் ஆளுநரது குறித்த விடயம் கண்டிக்கப்பட்டதுடன், அதற்கு அவர் மன்னிப்பு தெரிவித்து செய்தி வெளியிட வேண்டும் என்ற தீர்மானத்தையும் ஏகமனதாக நிறைவேற்றி அதை ஆளுநருக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறும் தீர்மானித்திருந்தனர்.
இது தொடர்பில் உறுப்பினர்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
''ஆளுநரது கருத்தைத் தீவகம் சார் சபையான எமது வேலணை பிரதேச சபை வன்மையான கண்டனங்களைத் தெரிவிக்கிறது. மேலும் மாவட்ட செயலகம் குறிப்பிட்டாக தெரிவித்திருக்கும் இவ்வாறான பல மாறுபட்ட கருத்துக்களை வெளியிடும் முன்னர் ஆளுநர் என்ற பதவியின் பொறுப்பை உணர்ந்து அவ்விடயத்தை ஆராய்ந்து உண்மையை அறிந்து அதன் சாதக பாதகங்களைக் கருத்திற் கொண்டு கருத்துக்களை வெளியிட்டிருக்க வேண்டும்.
யுத்தம் ஏற்படுத்தித் தந்த அவலங்களும் அண்மைய கோவிட் தொற்றின் தாண்டவமும் பல பெண்களின் வாழ்வியலை முழுமையாகப் புரட்டிப்போட்டுள்ளது. அதன் தாக்கத்தால் அவர்களது வாழ்வாதாரத்திற்கான பொருளாதாரத்தில் பின்னடைவு கைம்பெண்கள் குடும்பம், கல்வியில் பின்னடைவு போன்ற காரணங்களால் தீவகத்தில் மட்டுமல்லாது வடக்கின் பல பாகங்களிலும் பல பெண்கள் தலைமை ஏற்று நடத்தும் குடும்பங்கள் பல்வேறு பாதிப்புகளுக்கு முகங்கொடுத்தும் வந்துகொண்டிருக்கின்றனர்.
அத்துடன் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என்பது தீவகத்தில் மட்டுமல்ல வடக்கில் ஏன் நாடு முழுவதிலும் பெரும்பான்மையான முதன்மை வகிக்கும் ஒரு பிரச்சினையாகவும் காணப்படுகின்றது. இதை ஆளுநர் ஜீவன் தியாகராஜா அறிந்திருக்கவில்லையா?
அத்துடன் ஆளுநர் என்பவர் அவரது ஆளுமைக்கும் ஆற்றலுக்கும் ஏற்றவகையில் செயற்படுவது அவசியம். அதை அவர் எதிர்காலத்திலாவது செயற்படுத்தி இந்த மாகாணத்தில் காணப்படும் பெண்களின் பிரச்சினைகளை இனங்கண்டு அவர்களது வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கும் பிரச்சினைகளிலிருந்து அவர்களை மீட்டு ஒரு சுய பொருளாதாரத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் அர்த்தப்பூர்வமாக எதையாவது சாதித்தால் அவரது பொறுப்புக் காலம் ஒரு பொற்காலமாக அமையும்.
அத்துடன் வடக்கின் ஆளுநர் அரச திணைக்களங்கள் கூறிய தகவலை ஆராய்ந்து தெரிந்து கொள்வதில் அக்கறை காட்டுவதை விடுத்து தீவகத்தில் சில பெண்களின் நடவடிக்கைகள் தொடர்பாகச் சமூகப்பொறுப்பற்ற கருத்தை வெளியிட்டிருப்பது எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இதை தீவகத்தில் வாழும் எந்த குடிமகனும் ஏற்றுக்கொள்ளப் போவதும் கிடையாது. இதேநேரம் ஆளுநர் பெண்கள் விடயத்தில் மனசாட்சியுடன் அக்கறை எடுப்பாராக இருந்தால் பெண்கள் சார்பில் நாங்களும் அவருக்கு உதவுவதற்கும் அவர் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை வெற்றிகொள்ளச் செய்யவும் தயாராகவே இருக்கின்றோம்.
அதற்கு ஆளுநர் முன்வருவாரா? அல்லது ஆளுநரின் பார்வை தொடர்ந்தும் ஒரு மாறுபட்ட கோணத்தில் தான் இருக்கப்போகின்றாரா? என்பதையும் அவர்தான் தெளிவுபடுத்த வேண்டும். இதேநேரம் மாவட்ட செயலகம் குறிப்பிட்டாக தெரியப்படுத்தியிருக்கும் கருத்தை ஆளுநர் பொறுப்பானவராக ஆராய்ந்து அறிந்து கருத்துக்களை வெளியிட்டிருக்க வேண்டும்.
மாறாக இவ்வாறான கருத்துக்களைப் பொறுப்பிலுள்ள ஒருவராக இருந்துகொண்டு
வெளியிடுவதானது அவரது நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்துமே தவிர அவருக்குக்
கொடுக்கப்பட்ட பணியாக அமையாது'' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.



அதிகம் ட்ரோல் செய்யப்படும் தக் லைப்.. ஆனாலும் மணிரத்னம் உடன் இணைய காத்திருக்கும் முன்னணி ஹீரோ Cineulagam
