தமிழ்த்தேசிய இனத்தின் தந்தைக்கு நினைவேந்தல் அனுஷ்டிப்பு(Video)
புதிய இணைப்பு
தந்தை செல்வாவின் 46வது நினைவு நாள் (26.04.2023)ஆம் திகதி திருகோணமலையில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட இளைஞர் அணி தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழக அரசியல் துறை பேராசிரியர் என்.புஸ்பராஷா பேருரை நிகழ்த்தியுள்ளார்.
இந்நிகழ்வில் இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளைத்தலைவர் எஸ்.குகதாஸன், பொருளாளர் வெள்ளத்தம்பி சுரேஷ் குமார், மற்றும் உப்புவெளி பிரதேச சபையின் முன்னாள் தலைவர் டொக்டர் ஈ.ஜி.ஞானகுணாளன் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
யாழ்ப்பாணம்
தமிழ்த்தேசிய இனத்தின் தந்தை செல்வா மூதறிஞர் சா.ஜே.வே செல்வநாயகத்தின் 46 ஆவது நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
யாழ்.துரையப்பா விளையாட்டு அரங்கிற்கு அருகாமையில் உள்ள தந்தை செல்வா நினைவேந்தல் தூபியில் இன்று(26.04.2023) நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
அதிதிகளின் சிறப்புரைகள்
இதேவேளை தந்தை செல்வாவின் தூபிக்கு மலர்மாலை அணிவித்து நினைவஞ்சலி செலுத்தப்பட்டதுடன் பின்னர் சிறப்புரைகளும் நிகழ்த்தப்பட்டன.
இந்த நிகழ்வில் முன்னாள் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவருமான சோ.மாவைசேனாதிராஜா, தந்தை செல்வா நினைவு அறங்காவற்குழுவின் தலைவர் கலாநிதி சு.ஜெயநேசன், முன்னாள் வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், பிரதேச சபைகளின் முன்னாள் தவிசாளர்கள் உள்ளிட்ட நலன் விரும்பினர்கள் தந்தைசெல்வாவின் நினைவுக்குழுவின் உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
தந்தை செல்வாவின் நினைவுத் தூபி திரை நீக்கம்
தந்தை செல்வாவின் 46வது நினைவு நாளில் அவரது நினைவுத் தூபியொன்று யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது.
தெல்லிப்பழையில் அமைந்துள்ள சேமக்காலையில் இன்று புதன்கிழமை (26) மாலை 4.30 மணியளவில் குறித்த நினைவுத் தூபி தந்தை செல்வா நினைவு அறங்காவலர் குழு தலைவரும் தென்னிந்திய திருச்சபையின் ஓய்வுநிலை பேராயருமான சு.ஜெபநேசனால் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது.
கலைஞர் தவ.தஜேந்திரனால் நினைவுத் தூபி வடிமைக்கப்பட்டதுடன் இருபாலையிலுள்ள சஹானா சிற்பாலயம் சிற்ப வடிவமைப்பை மேற்கோண்டது.
இந்நிகழ்வில் தென்னிந்திய திருச்சபையின் பேராயர் வே.பத்மதயாளன், இலங்கைத்
தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, கிறிஸ்தவ மதகுருமார்கள் , தந்தை
செல்வா அறக்கட்டளை அங்கத்தவர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
திருகோணமலை
தந்தை செல்வாவின் 46வது நினைவு நாள் இன்று (26) திருகோணமலையில் அனுஷ்டிக்கப்பட்டது.
இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட இளைஞர் அணி ஏற்பாடு செய்த நினைவு பேருறையை கிழக்கு பல்கலைக்கழக அரசியல் துறை பேராசிரியர் என்.புஸ்பராஷா நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளைத்தலைவர் எஸ்.குகதாஸன் மற்றும் பொருளாளர் வெள்ளத்தம்பி சுரேஷ் குமார் , மற்றும் உப்புவெளி பிரதேச சபையின் முன்னாள் தலைவர் டொக்டர் ஈ.ஜி.ஞானகுணாளன் என பலரும் கலந்து கொண்டனர்.
செய்தி-பதுர்தீன் சியானா
அத்துடன் இன்றைய தினம் தந்தை செல்வா பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது.
தந்தை செல்வா என இலங்கைத் தமிழரால் அன்போடு அழைக்கப்படும் சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் அவர்கள் 1898 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் நாள் மலேசியா நாட்டிலுள்ள ஈபோ நகரில் பிறந்தார்.
இவருக்கு நான்கு வயதாக இருக்கும் பொழுது இவருடைய குடும்பம் இலங்கைக்குப் புலம்பெயர்ந்தது. இலங்கைக்கு வந்த குடும்பம்,யாழ்பாண மாவட்டத்திலே உள்ள தெல்லிப்பளை என்னும் ஊரில் குடியமர்ந்து, வாழ்ந்து வந்தது.
அவர் வாழ்ந்த வீட்டை தெல்லிப்பளையில் இப்பொழுதும் நாம் காணலாம்.
தந்தை செல்வா தனது தொடக்கக் கல்வியை தெல்லிப்பளை யூனியன் கல்லூரியிலும், இடைநிலைக் கல்வியை யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரி மற்றும் கொழும்பு சென்தோமஸ் கல்லூரியிலும், பட்டப்படிப்பை இலண்டன் பல்கலைக் கழகத்திலும் பயின்றார்.அவர் தனது 19 ஆவது அகவையிலே அறிவியல் இளமானிப்பட்டத்தை அதாவது பி எஸ் சி பட்டத்தைப் பெற்றார் இளமானிப்பட்டம் பெற்ற பின்பு தந்தை செல்வா கொழும்பு சென்தோமஸ் கல்லூரியில் ஆசிரியராகப் பணி புரிந்து வந்தார்.
இக்காலப் பகுதியில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த தந்தை செல்வாவின் தம்பி உடல்நல முற்றிருந்தார். அவரைப் போய் பார்ப்பதற்குப் பாடசாலை முதல்வரிடம் தந்தை செல்வா விடுமுறை கேட்டார்.
அதற்குப் பாடசாலை முதல்வர் விடுமுறை வழங்க மறுத்தார். இதன் விளைவாகத் தந்தை செல்வா தனது ஆசிரியர் பணியை துறந்தார்.
அதன்பின்பு கொழும்பு வெஸ்லி கல்லூரியில் ஆசிரியராக பணி புரிந்தார். ஆங்கிலேயர் ஆட்சி நிலவிய அக்காலத்தில், கிறித்தவப் பாடசாலை ஒன்றில் பணிபுரிந்த ஆசிரியர் செல்வநாயகம் அவர்கள் அவ்வப்பொழுது தமிழ் தேசிய உடை அணிந்துஅதாவது வேட்டி சட்டை அணிந்து பாடசாலைக்குச் சென்றார்.
பாடசாலை அதிபர் இதை விரும்பவில்லை. அதனால் இந்தப் பள்ளி ஆசிரியர் பணியையும் அவர் துறந்தார்.
இதுமட்டுமன்றித் தந்தை செல்வா தனது திருமண நாளில் தமிழ் தேசிய உடை அணிந்து வந்தமையானது மணமகள் வீட்டில் சலசலப்பை ஏற்படுத்தியது.
ஆசிரியப் பணியைத் துறந்த தந்தை செல்வா இலங்கை சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்று 1923 ஆம் ஆண்டில் வழக்கறிஞராக வெளியேறினார். அதன் பின்பு நீண்ட காலம் புகழ் பெற்ற குடிசார் (சிவில்) வழக்கறிஞராக விளங்கினார்.
பின்னர் இவருக்கு (கியூசி) பட்டமும் கிடைத்தது. இவர் வழக்கறிஞராக பணிபுரிந்த காலத்தில் திரு.ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்களுடைய தலைமையில் இயங்கிய அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியில் இணைந்து அதன் துணைத் தலைவராக பணியாற்றி வந்தார்.
இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் அமைக்கப்பட்ட முதலாவது அமைச்சரவையில் சேர்ந்து அமைச்சர் பதவி பெற வேண்டுமென திரு.ஜி.ஜி.பொன்னம்பலம் விரும்பினார். தந்தை செல்வா தமிழ் மக்களுக்கு உரிமை கிடைக்கும் வரையில் அமைச்சர் பதவியை எடுக்கக் கூடாதென்ற கொள்கையைக் கொண்டிருந்தார்.
அரசாங்கம் கொண்டுவந்த மலையக தமிழ் மக்களுடைய குடியுரிமையை பறிக்கும் இந்திய இலங்கைக் குடியுரிமைச் சட்டத்தை திரு.ஜி.ஜி.பொன்னம்பலம் ஆதரித்தார். தந்தை செல்வா இதை ஏற்றுக்கொள்ளவில்லை.
இவ்விரு விடயங்களிலும் ஏற்பட்டக் கருத்து வேறுபாடு காரணமாகத் தந்தை செல்வா தமிழ் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார். இவரோடு சேர்ந்து மருத்துவர் நாகநாதன்,திரு வன்னியசிங்கம் ஆகியோரும் விலகினர்.
தமிழ் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய தந்தை செல்வா 1948 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் நாள் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை நிறுவினார் (வன்னியசிங்கம், நாகநாதன்). இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி இலங்கைத் தமிழர் இனச் சிக்கலுக்குத் தீர்வாகக் கூட்டாட்சி முறையை வலியுறுத்தி வருகின்றது.
இந்தக் கட்சியிலே நாம் எல்லாரும் இருக்கின்றோம் என்பதை நான் உங்களுக்குக் கூற வேண்டியதில்லை. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியைத் தொடங்கியபின் தந்தை செல்வா போட்டியிட்ட முதலாவது தேர்தலில் தோல்வி கண்டார்.
எனினும் அதற்குப் பின்னர் அவர் போட்டியிட்ட ஆறு தேர்தல்களிலும் 85 வீதம் சைவர்கள் வாழ்கின்ற காங்கேயன் துறைத் தொகுதியில் கிறித்தவரான தந்தை செல்வநாயகம் தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்று வந்தார். இது தமிழ் மக்களிடையே அவருக்கு இருந்த செல்வாக்கைக் காட்டி நிற்கின்றது.
தந்தை செல்வா அரசியலில் இருந்த காலத்தில் அவரது கொள்கைகளை ஏற்பவர்கள் மட்டுமன்றி மறுப்பவர்களும், அவர் மீது மிகுந்த மரியாதை வைத்து இருந்தார்கள். அவரது கொள்கையை எதிர்த்த சிங்கள கட்சிகளும், சிங்கள மக்களும் அவர் அரசியலில் இருப்பதையே விரும்பினர்.
தந்தை செல்வா அவர்கள் அடுத்த தேர்தலைப் பற்றி சிந்திக்க வில்லை. அடுத்த தலைமுறைப் பற்றியே சிந்தித்தார். அவர் அதிகமாக பேசுபவரும் அல்ல, எழுதுபவரும் அல்ல, நல்ல ஆழமாக சிந்தித்துச் செயற்படுபவர்.
இவர் அரசியலுக்கு வராமல் இருந்தால் இலங்கைத் தமிழர் உரிமைக் கோரிக்கை மட்டுமன்றி தமிழர் என்ற அடையாளமும் அழிந்து போயிருக்கும் என்று கூறினால் அது மிகையல்ல. தந்தை செல்வா தனிப்பட்ட வாழ்கையில் மிக எளிமையான வாழ்கையே வாழ்ந்தார்.
தெல்லிப்பளையில் உள்ள அவரது இல்லத்திலும் சரி, கொழும்பில் அவர் வாழ்ந்த வாடகை வீட்டிலும் சரி அவரை யாரும் சென்று சந்தித்து தமது சிக்கல்களை கூறி தீர்வு காணக் கூடியவாறு இருந்தது.
இலங்கையிலுள்ள அரசியல்வாதிகளில் பலர் குறைந்த வசதியோடு அரசியலுக்கு வந்து, நிறைந்த வசதியோடு வாழ்ந்ததே வரலாறு.
ஆனால் தந்தை செல்வா மறுதலையாக நிறைந்த வசதியோடு அரசியலுக்கு வந்து குறைந்த வசதியோடு இறந்து போனார் என்பதுதான் உண்மையாகும் தமிழ் மக்கள் தமது மொழி, பண்பாடு, நாகரிகம் மற்றும் வாழ்க்கை முறைகளைப் பேண வேண்டுமாயின் தமிழருக்கு தனித்த ஒரு தன்ஆட்சி அலகு தேவையென 25 ஆண்டுகளாக கூட்டாட்சிக்காக குரல்கொடுத்தார்.
பல அற வழிப் போராட்டங்களை மேற்கொண்டார். சில உடன்படிக்கை களைச் செய்தார். தந்தை செல்வா அவர்கள் இலங்கை முதலமைச்சர் எஸ்.டபிள்யூ. ஆர்.டி பண்டாரநாயக்காவோடும், இலங்கையின் மற்றொரு முதலமைச்சர் டட்லி.சேனநாயக்காவோடும் உடன்படிக்கைகள் செய்தார்.
அந்த உடன்படிக்கைகள் மதிக்கப்படாத சூழலில், அவை கிழித்தெறியப்பட்ட பட்டறிவின் விளைவாக தனி நாடேஇலங்கைத் தமிழர் இனச் சிக்கலுக்குத் தீர்வாக அமையும் என்ற முடிவுக்கு தந்தை செல்வா வந்தார்.
இதன் பெறுபேறாக1976 ஆம் ஆண்டு மே 14 ஆம் நாள் புகழ்பெற்ற வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இவ்வாறு தமிழ் மக்களின் உரிமை மீட்புக்காக அயராது நேர்மையாக உழைத்த தந்தை
செல்வா அவர்கள் 1977 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் நாள் இவ்வுலக வாழ்கையை நீத்தார்.




















பாகிஸ்தானுக்கு அடுத்த அதிர்ச்சி., இந்தியக கடற்படையில் 10 புதிய போர்க்கப்பல்கள் இணைப்பு News Lankasri
