கொழும்பிலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய தொடருந்து சேவை
கொழும்பு - கோட்டையில் இருந்து கண்டிக்கு விசேட சொகுசு கடுகதி தொடருந்து சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய கொழும்பு கோட்டைக்கும் கண்டிக்கும் இடையிலான ‘கண்டி ஒடிஸி’தொடருந்து சேவையை போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன இன்று(01.10.2022) ஆரம்பித்து வைத்துள்ளார்.
‘கண்டி ஒடிஸி’தொடருந்து சேவை
இந்த தொடருந்து சேவை ஒவ்வொரு வார இறுதி நாட்களிலும் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொடருந்து, கொழும்பு கோட்டையில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட்டு 9.18 மணிக்கு கண்டியை சென்றடையும் எனவும் கண்டியில் இருந்து மாலை 4.50 மணிக்குப் புறப்பட்டு இரவு 7.40 மணிக்கு கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்தை வந்தடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொடருந்து பயணத்தின் காலம் 02 மணி 48 நிமிடங்கள் ஆகும்.
கட்டணங்கள் தொடர்பான விபரம்
இதேவேளை முதல் வகுப்பு பயணச்சீட்டு 2000 ரூபாய் மற்றும் 2ஆம் வகுப்பு பயணச்சீட்டு 1500 ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டி பல்லக்கு ஆலயம் மற்றும் பேராதனை தாவரவியல் பூங்காவிற்கு வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி புதிய தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இதேவேளை கொழும்பு கோட்டையில் இருந்து அனுராதபுரம் வரை விசேட சொகுசு சுற்றுலா தொடருந்து சேவையை ஆரம்பிக்க போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது.