தொடருந்தில் கைக்குழந்தையைக் கைவிட்டுச் சென்ற இளம் பெற்றோரின் விளக்கமறியல் நீடிப்பு
கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கிச் செல்லும் மீனகயா கடுகதி தொடருந்து கழிவறையில் கடந்த 11ஆம் திகதி பச்சிளம் குழந்தையொன்று கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குழந்தையின் தாய் பண்டாரவளை பகுதியை சேர்ந்த 25 வயதுடைய பெண் எனவும், தந்தை கொஸ்லந்த பிரதேசத்தை வசிப்பிடமாகவும் கொண்டவர் எனவும் தெரியவந்திருந்த நிலையில் பொலிஸார் அவர்களைக் கைது செய்திருந்தனர்.
நீதிமன்றத்தின் உத்தரவு
அதன் பின்னர் பதுளை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இருவரும் இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டு முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
அதனையடுத்து கைவிடப்பட்ட குழந்தையின் தந்தை மற்றும் தாய் இருவரையும் மார்ச் 17 வரை விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மற்றும் குழந்தை தொடர்ந்தும் ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.