நாடு முழுவதும் க்ளீன் ஸ்ரீலங்கா மாதிரி நகரங்கள் நிர்மாணிக்க அரசாங்கம் உத்தேசம்
“க்ளீன் ஸ்ரீலங்கா” எனக் கருப்பொருளின் கீழ், சமூக ரீதியாகவும் சுற்றுச்சூழல் ரீதியாகவும் மேம்பட்ட டிஜிட்டல் சேவை வசதிகளுடன் கூடிய புதிய மாதிரி நகரங்களை உருவாக்குவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
“க்ளீன் ஸ்ரீலங்கா” செயலணி, ஜனாதிபதியின் செயலாளர் டி.கே. நந்திக சனத் குமாநாயக்கவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் கூடியபோது மேற்குறித்த விடயம் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
க்ளீன் ஸ்ரீலங்கா திட்டம்
இந்த நகர அபிவிருத்தித் திட்டத்தை மேலும் நடைமுறை மற்றும் அறிவியல் பூர்வமான அடிப்படையில் செயல்படுத்துவதற்காக, மொரட்டுவ பல்கலைக்கழகத்திடமிருந்து முழுமையான தொழில்நுட்ப உதவியைப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதே சமயம், நகர வடிவமைப்பு தொடர்பான சர்வதேச தரநிலைகளுக்கு இணங்க வழிகாட்டுதல்களைத் தயாரிப்பதற்காக, மொரட்டுவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டி.கே. சித்துமினி ரத்னமலலவின் தலைமையில், “க்ளீன் ஸ்ரீலங்கா” செயலணியின் பல செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் இந்த துறையில் உள்ள பல புலமையாளர்களைக் கொண்ட ஒரு விசேட நிபுணர் குழு நியமிக்கப்பட்டது.

இந்தத் திட்டத்தின் ஆரம்ப கட்டத்தில், உலகில் உள்ள வெற்றிகரமான நகர வடிவமைப்பு மாதிரிகளை ஆய்வு செய்து இந்த குழுவால் தயாரிக்கப்பட்ட அறிவியல் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் பல மாதிரி நகரங்களை நடைமுறையில் உருவாக்க எதிர்பார்க்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, நாடளாவிய ரீதியில் மற்ற நகரங்களை நவீனமயமாக்குவதற்கான தொடர்ச்சியான அறிவியல் வழிகாட்டுதல்களைத் தயாரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை முழுவதும் நடைமுறைப்படுத்த திட்டம்
இந்த மாதிரி நகரத் திட்டம் பௌதீக மேம்பாட்டுடன் மட்டும் நின்றுவிடாமல், “க்ளீன் ஸ்ரீலங்கா” செயலணி தேசியத் திட்டத்தின் அடிப்படை நோக்கங்களுக்கு இணங்க, அந்நகரங்களில் வாழும் மக்களை அறநெறியில் உயர்ந்த சமூகமாக மாற்றுவதற்கும் சிறப்புக் கவனம் செலுத்தப்படுகிறது.
இதன்படி, உயர்ந்த மனித மற்றும் சமூக விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட, ஒருவரையொருவர் மதிக்கும், மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த கருத்துக்களின் அடிப்படையில் தூய்மையான நகரச் சூழலை உருவாக்கும் ஒரு நல்ல நகர சமூகத்தைக் கட்டியெழுப்ப எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், பொதுமக்களுக்குத் தேவையான சேவைகளை உடனடியாகவும் வெளிப்படையாகவும் வழங்குவதற்காக நவீன தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் ஒரு விரிவான மின்னணுச் சேவை வலையமைப்பை அந்நகரத்தில் நிறுவவும் எதிர்பார்க்கப்படுகிறது.
கழிவுகளை அறிவியல் பூர்வமாகவும் முறையாகவும் எவ்வாறு கையாள்வது என்பது குறித்து ஆலோசனை வழங்க ஒரு நிபுணர் குழு நியமிக்கப்பட்டுள்ளதுடன், அந்த ஆலோசனைகளைத் இலங்கை முழுவதும் செயல்படுத்துவதற்கான திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளன.